ராஜஸ்தான் கூட்டத்துக்கு டிராக்டர் ஓட்டி வந்தார், ராகுல் மோடி மீது சாடல்


ராஜஸ்தான் கூட்டத்துக்கு டிராக்டர் ஓட்டி வந்தார், ராகுல் மோடி மீது சாடல்
x
தினத்தந்தி 14 Feb 2021 1:19 AM GMT (Updated: 14 Feb 2021 1:19 AM GMT)

ராஜஸ்தான் கூட்டத்துக்கு ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டி வந்தார். அவர் பிரதமர் மோடி மீது சாடினார்.

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்தார். இரண்டாவது நாளான நேற்று அவர் ரூபன்கார் என்ற இடத்தில் நடந்த கூட்டத்துக்காக அவர் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோட்டாஸ்ராவுடன் டிராக்டர் ஓட்டி கொண்டு வந்தார்.

இந்த கூட்டத்தில் பேசிய அவர் பிரதமர் மோடியை சாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாய தொழிலில் 40 சதவீதம் பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விவசாயிகள், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் ஆவார்கள். ஆனால் நரேந்திரமோடி ஒட்டு மொத்த விவசாய தொழிலையும் தனது 2 நண்பர்களுக்கு கொடுக்க விரும்புகிறார். இதுதான் வேளாண் சட்டங்கள் கொண்டு வந்ததின் நோக்கம் ஆகும்.

நரேந்திரமோடி 3 தெரிவுகளை தருகிறார். அவை, பட்டினி, வேலை இல்லா திண்டாட்டம், தற்கொலை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்துக்கு 2 டிராக்டர் டிரைலர்களை கொண்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது. விவசாயிகள் டிராக்டர் டிரைலர்களில் அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும் ராகுல் காந்தி பேச்சை கவனித்தனர்.

நாகார் என்ற இடத்தில் நடந்த கூட்டத்திலும் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டின் இளைஞர்களிடம் இருந்து எதிர்காலம் பறிக்கப்படுகிறது. உங்கள் கண்முன்னால் நாட்டின் முதுகெலும்பு முறிக்கப்படுகிறது. பண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி போன்றவற்றால் சிறு வணிகங்கள் பாதித்துள்ளன. விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். அவர்களது பாதை, 2 அல்லது 3 தொழில் அதிபர்களுக்காக அகற்றப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கின்போது இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு போவதற்காக டிக்கெட் வழங்குமாறு பிரதமரை கேட்டார்கள். அதை அவர் செய்யவில்லை. அதே நேரத்தில் பணக்காரர்களின் ரூ.1.5 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

உண்மையை சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதை கேட்பதும், கேட்காமல் இருப்பதும் மக்கள் விருப்பம் ஆகும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய 200 விவசாயிகள் மறைவுக்காக நான் நாடாளுமன்றத்தில் மவுன அஞ்சலி செலுத்தியபோது, ஒரு பா.ஜ.க. எம்.பி.கூட எழுந்து நிற்கவில்லை.

நான் எழுதி கொடுக்க வேண்டும் என்று சபாநாயகர் கூறினார். நான் சபாநாயகருக்கு எழுதுவேன். மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுனம் கடைப்பிடிக்க வேண்டும். சபாநாயகர் இதை அனுமதிப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story