பாலியல் வழக்கில் சர்ச்சையான தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு மேலும் ஒரு பின்னடைவு
பாலியல் வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்த நீதிபதியின் பதவிக்காலம் ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக புஷ்பா கனேதிவாலா பணியாற்றி வருகிறார். சமீபத்தில் போக்சோ சட்டம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி புஷ்பா கனேதிவாலா, உடலோடு உடல் தீண்டாமல் ஆடையுடன் தீண்டுவது பாலியல் சீண்டல் ஆகாது என தீப்பளித்தார். இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.
இதேபோல் மற்றொரு பாலியல் வழக்கில், குற்றவாளியின் பேண்ட் ஜிப் திறந்திருந்ததை வைத்தும், சிறுமியின் கையை அவர் பிடித்திருந்ததை வைத்தும் பாலியல் வன்முறை செய்ததாக கருத முடியாது என்று அவர் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்புகள் சர்ச்சையானது. எனினும் மும்பை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா கனேதிவாலாவின் கூடுதல் நீதிபதி பதவிக்காலம் 2 ஆண்டுகளாக இருந்ததை ஓராண்டாக குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் அவரை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை திரும்பப் பெற்றது.
Related Tags :
Next Story