நண்பனின் மனைவியின் கள்ளக்காதலை கண்டித்த வியாபாரி படுகொலை


நண்பனின் மனைவியின் கள்ளக்காதலை கண்டித்த வியாபாரி படுகொலை
x
தினத்தந்தி 15 Feb 2021 8:33 PM GMT (Updated: 15 Feb 2021 8:33 PM GMT)

பிரம்மாவர் தாலுகாவில் நண்பனின் மனைவியின் கள்ளக்காதலை கண்டித்த வியாபாரி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பிரம்மாவர் தாலுகாவில் நண்பனின் மனைவியின் கள்ளக்காதலை கண்டித்த வியாபாரி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல்

  உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா ஒசூர் கிராமம் உட்டல்கா பகுதியைச் சேர்ந்தவர் நவீன் நாயக்(வயது 43). இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். நவீன் வியாபாரி ஆவார். இவரது பக்கத்து வீட்டில் இவரது நண்பனின் மனைவியும், அவரது மகனும் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், மல்பே பகுதியைச் சேர்ந்த கவுதம்(26) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

  இதையடுத்து கவுதமும், அந்த பெண்ணும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதுபற்றி நவீனுக்கு தெரியவந்தது. அவர் அந்த பெண்ணை அழைத்து கண்டித்துள்ளார். அப்போது அந்த பெண், நவீனை திட்டி உள்ளார். மேலும் தனது தனிப்பட்ட விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று எச்சரித்து இருக்கிறார்.

கண்டிப்பு

  இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கவுதமும், அவரது கள்ளக்காதலியான அந்த பெண்ணும் குட்டே அங்கடி கிராஸ் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நவீன், அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கவுதம், நவீனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதலர் தினமான நேற்று முன்தினம் நவீனின் மனைவி மற்றும் மகன்கள் வெளியே சென்றிருந்தனர்.

  வீட்டில் நவீன் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதுபற்றி அந்த பெண், தனது கள்ளக்காதலனான கவுதமுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். அதன்பேரில் கவுதம் தனது கூட்டாளிகள் 5 பேருடன் காரில் நவீனின் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து நவீனை அவர்கள் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

வலைவீச்சு

  இந்த நிலையில் இரவில் வீடு திரும்பிய நவீனின் மனைவியும், அவரது மகன்களும் நவீன் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி பிரம்மாவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் நவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமை கைது செய்தனர். அதுமட்டுமின்றி தப்பி ஓடிய அவரது கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story