மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நியமனம்
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நியமனம் செய்யப்பட்டதற்கு, மாநிலங்களவைத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுடெல்லி,
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாதின், எம்பி பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அந்தப் பொறுப்புக்கு மற்றொரு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நியமனம் செய்யப்பட்டதற்கு, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஒப்புதல் அளித்துள்ளதாக மாநிலங்களவை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இடைக்கால கட்சித் தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி, கார்கேவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்குரியவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்து வருகிறார். 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளுக்கு இடையே மக்களவையின் காங்கிரஸ் கட்சித் தலைவராக கார்கே இருந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் கார்கே தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஜுன் மாதம் மாநிலங்களவை எம்பி-யானார்.
Related Tags :
Next Story