எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்ததால் பயங்கரம் மனைவி பிறந்தநாளில் புதுமாப்பிள்ளை ஆணவக்கொலை; மைத்துனர் உள்பட 2 பேர் கைது


எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்ததால் பயங்கரம் மனைவி பிறந்தநாளில் புதுமாப்பிள்ளை ஆணவக்கொலை; மைத்துனர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Feb 2021 9:25 PM GMT (Updated: 16 Feb 2021 9:25 PM GMT)

எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்ததால், மனைவி பிறந்தநாளில் புதுமாப்பிள்ளை ஆணவக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மைத்துனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு: எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்ததால், மனைவி பிறந்தநாளில் புதுமாப்பிள்ளை ஆணவக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மைத்துனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

திருமணமாகி 2 மாதம்

பெங்களூரு ராஜகோபால்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட லக்கரேயை சேர்ந்தவர் சேத்தன் (வயது 25). இவரது மனைவி பூமிகா. இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து  இருந்தனர். திருமணத்திற்கு பின்பு லக்கரேயில் வாடகை வீட்டில் சேத்தனும், பூமிகாவும் வசித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பூமிகாவின் பெற்றோர், குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஆனாலும் அவர்களது எதிர்ப்பையும் மீறி பூமிகாவை சேத்தன் திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில், நேற்று பூமிகாவுக்கு பிறந்தநாள் ஆகும். இதனால் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க, பூமிகாவின் சகோதரர் ஆகாஷ், சித்தப்பா நஞ்சேகவுடா சேத்தன் வீட்டுக்கு வந்திருந்ததாக தெரிகிறது. அப்போது வீட்டின் அருகே வைத்து சேத்தன், ஆகாஷ் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது.

வாலிபர் கொலை

அந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த ஆகாஷ், அவரது சித்தப்பா நஞ்சேகவுடா ஆகிய 2 பேரும் சேர்ந்து சேத்தனின் கழுத்தை கத்தியால் அறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். உடனே அங்கிருந்து 2 பேரும் தப்பி ஓடிவிட்டார்கள். 

தனது கணவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த பூமிகா அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். தகவல் அறிந்ததும் ராஜகோபால்நகர் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேத்தனின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது தங்களது எதிர்ப்பையும் மீறி பூமிகாவை சேத்தன் திருமணம் செய்திருந்ததால், ஆத்திரத்தில் இருந்து வந்த ஆகாஷ், அவரது சித்தப்பா நஞ்சேகவுடா ஆகிய 2 பேரும் சேத்தனை தீர்த்து கட்டியது தெரியவந்தது. இந்த ஆணவக்கொலை குறித்து ராஜகோபால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் தலைமறைவாக இருந்த ஆகாஷ், நஞ்சேகவுடாவை கைது செய்துள்ளனர். அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் ராஜகோபால்நகரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story