சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழா; மார்ச் 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழா; மார்ச் 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 17 Feb 2021 7:26 PM GMT (Updated: 17 Feb 2021 7:26 PM GMT)

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்தர ஆறாட்டு திருவிழா மார்ச் 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவனந்தபுரம்,

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 12-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. 13-ந்தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து அய்யப்பன் கோவில் நடை நேற்று அடைக்கப்பட்டது.

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற மார்ச் மாதம் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 15-ந்தேதி முதல் மாத பூஜை 5 நாட்கள் நடைபெறும். அதைத்தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்தர ஆறாட்டு திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது.

அன்றைய தினம் காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார். விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன், ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறுகிறது. 27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடக்கிறது.

28-ந் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு நடைபெறுகிறது. அன்று மாலை கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு ஆறாட்டு திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story