69 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்: ‘வேலைவாய்ப்பு, கல்வி நிறுவன சேர்க்கைக்கு இடஒதுக்கீடு அளிப்பது மாநில அரசின் உரிமை’- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்


69 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்: ‘வேலைவாய்ப்பு, கல்வி நிறுவன சேர்க்கைக்கு இடஒதுக்கீடு அளிப்பது மாநில அரசின் உரிமை’- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 17 Feb 2021 11:30 PM GMT (Updated: 17 Feb 2021 11:30 PM GMT)

மாநில அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு அளிப்பது என்பது மாநில அரசின் உரிமை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த பி.எஸ். தினேஷ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் உதவி செயலாளர் என்.எஸ். வெங்கடேஷ்வரன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்ப்பதற்கு நிரந்தர அமைப்பை உருவாக்க சுப்ரீம் கோர்ட்டு இந்திரா சகானி வழக்கில் உத்தரவிட்டதுபடி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

மத்திய அரசு பணிகளில் மண்டல் கமிஷன் அறிக்கையின்படி, மாநில அரசு பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான பொருள் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய சட்டத்தில் விளக்கப்பட்டு உள்ளது.

சமூகரீதியாக, கல்வி ரீதியாக பின்தங்கிய சமுதாயத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதும், தவறாக சேர்க்கப்பட்டு விட்டதாக புகார் வந்தால் அந்த சாதியினரை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான கோரிக்கைகளை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிசீலித்து மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் சமூக ரீதியாக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியுள்ள பிரிவினரை அம்மாநில அரசின் ஆலோசனைப்படி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அறிவிக்கை வெளியிட ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.

சமூக ரீதியாக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியுள்ள பிரிவினரை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. .

அதே சமயம், மாநில அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு சமூக ரீதியாக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியுள்ள பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநில அரசுகள் கொண்டிருக்க முடியும்.

மாநில அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வேறுபட்டிருக்கலாம். சமூக ரீதியாக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து மாநில அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு அளிப்பது என்பது மாநில அரசு சார்ந்த உரிமை, இதில் மத்திய அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை.

அரசியலமைப்பு சாசனம் 102-வது திருத்தத்துக்கு (மராத்தா இடஒதுக்கீடு) எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு முன் நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்தே, 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரினார்.

இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Next Story