அரியானா, பீகார், காஷ்மீரில் தீவிரமடைந்த விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்


அரியானா, பீகார், காஷ்மீரில் தீவிரமடைந்த விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2021 7:56 AM GMT (Updated: 18 Feb 2021 7:56 AM GMT)

அரியானா, காஷ்மீர், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி நடத்தி நாடு முழுவதும் கவனம் ஈர்த்தனர்.  தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்ற பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.  இதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில் சேவையை உறுதி செய்ய ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ரெயில் மறியலை தடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்தில் ரெயில்களின் பாதுகாப்புக்காக கூடுதல் படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன.

ரெயில் மறியலை முன்னிட்டு திக்ரி எல்லை, பண்டிட் ஸ்ரீராம் சர்மா, பகதூர்கார் சிட்டி மற்றும் பிரிகேடியர் ஹோசியார் சிங் உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன என டெல்லி மெட்ரோ ரெயில்வே கழகம் தெரிவித்து உள்ளது.

டெல்லியில் நங்லோய் ரெயில் நிலையத்திலும், அரியானாவில் பல்வால் ரெயில் நிலையத்திலும், உத்தர பிரதேசத்தின் காசியாபாத் ஜங்சனிலும் பாதுகாப்பு பணிகளுக்காக போலீஸ் படை குவிக்கப்பட்டு உள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன்படி, அரியானாவின் பல்வால் ரெயில் நிலையத்தில் விவசாயிகள் ரெயில் தண்டவாளங்களை மறித்தபடியும், அதில் அமர்ந்தபடியும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஐக்கிய விவசாய முன்னணி என்ற பெயரிலான விவசாய அமைப்பினை சேர்ந்த விவசாயிகள் ஜம்முவில் உள்ள சன்னி ஹிமத் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்தபடி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பீகாரில் ஜன அதிகார் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பாட்னா ரெயில்வே நிலையத்தில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்கள் ரெயில் என்ஜினின் முகப்பு மீது ஏறி கொடியை காண்பித்து கோஷங்களை எழுப்பினர்.  சிலர் பேனர்களை கைகளில் வைத்து கொண்டு ரெயில் தண்டவாளத்தின் மீது நெடுகிலும் படுத்து கொண்டும் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

Next Story