காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிருபிக்க உத்தரவிட கோரி புதுச்சேரி எதிர்கட்சிகள் கவர்னரிடம் கோரிக்கை


காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிருபிக்க உத்தரவிட கோரி புதுச்சேரி எதிர்கட்சிகள் கவர்னரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2021 11:01 AM GMT (Updated: 18 Feb 2021 11:01 AM GMT)

காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிருபிக்க உத்தரவிட கோரி புதுச்சேரி எதிர்கட்சிகள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து கோரிக்கை வைத்து உள்ளனர்.

புதுச்சேரி: 

புதுவை சட்டமன்றத்தை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30, நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 என 33 பேர் இருப்பார்கள். கட்சி தாவல் நடவடிக்கை காரணமாக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது. 

சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து, காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்தை பேரவையில் சந்தித்து ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டி இழந்துள்ள நிலையில் தார்மீக பொறுப்பேற்று முதல்வர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அவர்களின் கோரிக்கை நியாயமானதல்ல, எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம் என முதல்வர் நாராயண சாமி தெரிவித்தார்.

 இதனை தொடர்ந்து, நேற்று, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக  எம்எல்ஏக்கள், பாஜக நியமன எம்எல்ஏக்கள் புதுச்சேரி கவர்னரின் செயலர் சுந்தரேசன், சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் ஆகியோரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரும் மனுவை வழங்கினர். இதில் 14 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

இதற்கிடையே, இன்று புதுச்சேரி கவர்னராக க தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். இந்நிலையில்,  புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை கவர்னர்  மாளிகையில் எதிர்க்கட்சித் தலைவர்களை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக  எம்எல்ஏக்கள், பாஜக நியமன எம்எல்ஏக்கள்  சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது, ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிருபிக்க உத்தரவிட கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, புதுச்சேரி கவர்னராக தவியேற்ற தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது; புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் வழங்கிய மனுவை பார்க்க உள்ளேன். என்னை சந்தித்துப் பேச வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எனக்கு எந்த சார்பும் கிடையாது; நான் சமமாக நடந்துகொள்வேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story