சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தூக்கிலிடப்படும் பெண்


சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தூக்கிலிடப்படும் பெண்
x
தினத்தந்தி 18 Feb 2021 1:21 PM GMT (Updated: 18 Feb 2021 1:21 PM GMT)

சுதந்திரம் பெற்றபின் முதல் முறையாக இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட போகிறது.

லக்னோ

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் வன்கேடா கிராமத்தில் உள்ள பள்ளியின் ஆசிரியராக இருந்த சவுகத் அலியின் மகள் ஷப்னம்.  பட்டதாரியான ஷப்னம், படிக்காத கூலித் தொழிலாளியான சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் திருமணத்துக்கு ஷப்னத்தின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி ஷப்னத்தின் ஒட்டு மொத்தக் குடும்பமும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது. 

அடையாளம் தெரியாத சிலர், ஷப்னத்தின் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் கொன்று குவித்துவிட்டுச் சென்றதாக ஷப்னம் போலீசாரிடம்  கூறினார்.ஆனால் போலீசாரின்  விசாரணையில், இந்த கொலையில், ஷப்னம் மற்றும் அவரது காதலன் சலீமும் ஈடுபட்டது தெரிய வந்தது.

 குடும்பத்தினர் அனைவருக்கும்  உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, அனைவரும் உறங்கிய பிறகு, சலீமை வரவழைத்து பெற்றோர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கழுத்தறுத்துக் கொன்றுகுவித்துள்ளார். தனது வீட்டிலிருந்த மிகச் சிறிய குழந்தையை கூட ஷப்னம் விட்டுவைக்கவில்லை.  10 மாதக் குழந்தையையும் கொன்றுள்ளார்.

இந்த வழக்கில் ஜூலை 14, 2010 அன்று மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. 2010 ஆம் ஆண்டில், அலகாபாத் ஐகோர்ட்டில் இருவரும் மேல் முறையீடு  செய்தனர். ஐகோர்ட்டும் மரண தண்டனையை உறுதி செய்தது.

அதை தொடர்ந்து  2015-ஆம் ஆண்டு அவர்களது தூக்கு தண்டனையை  சுப்ரீம்  கோர்ட்டும்  உறுதி செய்தது. இந்த நிலையில் ஷப்னம்  தூக்கிலுடும் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

இந்தியாவிலேயே பெண்களை தூக்கிலிடும் அறை ஒரே ஒரு இடத்தில்தான் உள்ளது. ஆனால், சுதந்திர இந்தியாவில் அந்த அறை இதுவரை பயன்படுத்தப்பட்டதே இல்லை. அது மதுரா சிறையில் 1870-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்த சிறைக் கூடத்தில் 1998 ஏப்ரல் 6-ஆம் தேதி லக்னோவைச் சேர்ந்த ராம்ஸ்ரீ என்பவரை தூக்கிலிட ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு குழந்தை பிறந்ததால், தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சிறைக்கூடத்துக்கு, நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட்ட பவான் ஜல்லாத் அவ்வப்போது வந்து, சிறைக் கூடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து சிறைத் துறைக்கு அறிவுறுத்தி வருகிறார்.இது குறித்து மதுரா றைக் கூட காவல் கண்காணிப்பாளர் ஹைலேந்திர குமார் கூறுகையில், ஷப்னத்தை தூக்கிலிடும் தேதி இறுதி செய்யப்படவில்லை. ஆனால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அவருக்கு தூக்கு தண்டனைக்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதும் அவர் தூக்கிலிடப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story