காவிரி உபரிநீரை தமிழகம் பயன்படுத்தி கொள்வதற்கு கர்நாடக அரசு அனுமதிக்காது; கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பரபரப்பு பேட்டி + "||" + The Karnataka Government will not allow Tamil Nadu to use the Cauvery surplus; Karnataka CM Yediyurappa
காவிரி உபரிநீரை தமிழகம் பயன்படுத்தி கொள்வதற்கு கர்நாடக அரசு அனுமதிக்காது; கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பரபரப்பு பேட்டி
காவிரி உபரிநீரை தமிழகம் பயன்படுத்தி கொள்வதற்கு கர்நாடக அரசு அனுமதிக்காது என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பிரச்சினை இருந்து வருகிறது.
நதிகள் இணைப்பு திட்டம்
இந்த நிலையில், ரூ.14,400 கோடி செலவில் காவிரி, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் விதமாக நதிகள் இணைப்பு திட்டத்தை நேற்று முன்தினம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலக்கும் நிலை இருந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, காவிரி ஆற்றின் உபரி நீரை வறட்சியின் பிடியில் சிக்கி இருக்கும் தமிழக தென் மாவட்டங்களுக்கு திருப்பிவிடும் விதமாக இந்த நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள காவிரி, வைகை, குண்டாறு ஆகிய 3 நதிகளையும் இணைக்கும் திட்டத்திற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மந்திரி ஆலோசனை
காவிரி, மகதாயி மற்றும் கிருஷ்ணா நதிநீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி நேற்று முன்தினம் டெல்லியில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த கூட்டத்தில் நீர்ப்பாசனத்துறை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது காவிரியில் 45 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி )உபரி நீரை பயன்படுத்தி தான் காவிரி, வைகை, குண்டாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழ்நாடு மேற்கொண்டு இருப்பதாக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள், மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியிடம்
விளக்கமாக எடுத்து கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, காவிரி ஆற்றின் உபரிநீரை பயன்படுத்தி தமிழ்நாடு தொடங்கி உள்ள புதிய திட்டம் குறித்து மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு கவனத்திற்கு கொண்டு செல்வது குறித்து அதிகாரிகளுடன், மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஆலோசனை நடத்தி இருந்தார்.
எடியூரப்பா
அதுபற்றி முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் ஆலோசித்துவிட்டு இறுதி முடிவு எடுக்கலாம் என்று அதிகாரிகளிடம் ரமேஷ் ஜார்கிகோளி கூறியதாக தெரிகிறது. அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
கர்நாடகம் அனுமதி அளிக்காது
“காவிரி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த கர்நாடகம் ஒருபோதும் அனுமதிக்காது. அதற்கான வாய்ப்பே இல்லை. காவிரியில் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக நீரை வழங்கவும் சாத்தியமில்லை. எனது தலைமையிலான அரசு, அதற்கு வாய்ப்பளிக்காது. காவிரி நதிநீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி தமிழ்நாடு நடந்து கொள்ள வேண்டும்.இந்த விவகாரத்தில் அவர்கள் கூறும் கருத்துகளுக்கு, எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூற வேண்டும் என்பது அவசியமில்லை. இதனால் யாருக்கும் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்படி எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு எடுக்கும். இது தொடர்பாக யாரும் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை. காவிரி நதிநீர் பிரச்சினையில் தற்போதைக்கு அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.”
சி.டி.யை காட்டி மிரட்டி மந்திரி பதவி பெற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் தைரியம் எடியூரப்பாவுக்கு உள்ளதா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மந்திரிசபை நாளை மறுநாள்(புதன்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக 7 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.