இந்தியாவில் மொத்த பாதிப்பு 1.10 கோடி ஆனது; சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1½ லட்சமாக உயர்வு


இந்தியாவில் மொத்த பாதிப்பு 1.10 கோடி ஆனது; சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1½ லட்சமாக உயர்வு
x
தினத்தந்தி 22 Feb 2021 6:54 PM GMT (Updated: 22 Feb 2021 6:54 PM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.10 கோடியை எட்டியுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 1½ லட்சமாக உயர்ந்து விட்டது.

14,199 பேருக்கு தொற்று
இந்தியா முழுவதும் கொரோனாவின் வீரியம் கட்டுக்குள் வந்து கொண்டிருந்த நிலையில், சமீப நாட்களாக சில மாநிலங்களில் தொற்றின் வேகம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக கேரளா, மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் வீரியமடைந்து உள்ளது. இதனால் இந்தியாவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. 

சுமார் 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த தினசரி பாதிப்பு தற்போது 15 ஆயிரத்தை தொடும் நிலைக்கு சென்றுள்ளது.அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்திலும் 14,199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 86.30 சதவீதம் பேர் 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதுவும் மராட்டியம், கேரளாவில் மட்டுமே முறையே 6,971 மற்றும் 4,070 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

பாதிப்பு இல்லா மாநிலங்கள்
நாடு முழுவதும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து இந்தியாவின் மொத்த பாதிப்பு 1.10 கோடியாக உயர்ந்து உள்ளது. அதாவது 1 கோடியே 10 லட்சத்து 5 ஆயிரத்து 850 பேர் இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.ஒருபுறம் சில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் சில மாநிலங்கள் புதிய பாதிப்புகள் இன்றி தப்பித்து இருக்கின்றன. அந்த வகையில் உத்தரகாண்ட், மேகாலயா, மிசோரம், அருணாசல பிரதேசம், லடாக், டாமன்-டையூ-தாதர்-நாகர் ஹவேலி மற்றும் அந்தமான் நிகோபார் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்படி 24 மணி நேரத்தில் எந்தவித புதிய பாதிப்பும் பதிவாகவில்லை.

83 பேர் சாவு
புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இவ்வாறு இருக்க, நாடு முழுவதும் மேற்படி 24 மணி நேரத்தில் நிகழ்ந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கையோ 83 என்ற அளவிலேயே இருந்தது. இதிலும் அதிகபட்சமாக மராட்டியர்கள் 35 பேரும், மலையாளிகள் 15 பேரும் இறந்துள்ளனர்.இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 385 ஆகியிருக்கிறது. இது மொத்த பாதிப்பில் 1.42 சதவீதம் ஆகும்.

1.36 சதவீதத்தினருக்கு சிகிச்சை
இதற்கிடையே மேற்படி 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 9 ஆயிரத்து 695 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 99 ஆயிரத்து 410 ஆகியிருக்கிறது. இது மொத்த பாதிப்பில் 97.22 சதவீதம் ஆகும்.குறிப்பிட்ட சில மாநிலங்களில் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்போர் 
எண்ணிக்கை 5-வது நாளாக நேற்றும் அதிகரித்து இருந்தது. குறிப்பாக இந்த எண்ணிக்கை 1½ லட்சத்தை கடந்து விட்டது.நேற்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 55 பேர் சிகிச்சையில் இருந்தனர். இது 1.36 சதவீதம் ஆகும்.

பரிசோதனை எண்ணிக்கை
விடுமுறை தினமான நேற்று முன்தினமும் நாடு முழுவதும் 6 லட்சத்து 20 ஆயிரத்து 216 சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 21.15 கோடியாக அதிகரித்து இருக்கிறது. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 2,393 பரிசோதனைக்கூடங்களில் கொரோனா பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இதில் 1,220 ஆய்வகங்கள் அரசுக்கு சொந்தமானவை ஆகும்.இவ்வாறு பரிசோதனைகள் அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் ஒட்டுமொத்த சாத்திய விகிதம் 5.20 ஆகவே நீடித்து வருகிறது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

Next Story