அமிதாப் பச்சன், அக்சய் குமார் படங்களுக்கு இடையூறு ஏற்பட விட மாட்டோம்; மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பேச்சு


மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே
x
மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே
தினத்தந்தி 22 Feb 2021 9:59 PM GMT (Updated: 22 Feb 2021 9:59 PM GMT)

நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்சய் குமாரின் படங்களுக்கு இடையூறு ஏற்பட விட மாட்டோம் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் எச்சரிக்கை
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மன்மோகன்சிங் ஆட்சியின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை விமர்சித்த நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்சய் குமார் போன்றவர்கள் தற்போது அமைதியாக இருப்பதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கருத்து கூறாவிட்டால் அமிதாப் பச்சன், அக்சய் குமாரின் படங்களை மராட்டியத்தில் திரையிடவும், படப்பிடிப்பு நடத்த விடவும் அனுமதிக்க மாட்டோம் என எச்சரித்து இருந்தார்.

அத்வாலே ஆதரவு
இந்தநிலையில் நவிமும்பை, வாஷியில் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கலந்து கொண்டார். அப்போது அவர், நடிகர்கள் அக்சய்குமார், அமிதாப் பச்சனின் படங்களுக்கு இடையூறு ஏற்படுத்த எங்கள் கட்சியினர் விட மாட்டார்கள் என்று பேசினார். அதேபோல விரைவில் 2 நடிகர்களையும் சந்தித்து தனது ஆதரவை தெரிவிப்பேன் என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "அராஜகத்தை மாநிலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் (காங்கிரஸ்) அதுபோன்ற கருத்துகளை கூற கூடாது" என்றார். ஏற்கனவே ராம்தாஸ் அத்வாலே மாநில அரசுடன் மோதல் ஏற்பட்ட போது நடிகை கங்கனா ரனாவத்திற்கும், இயக்குனருக்கு எதிராக கற்பழிப்பு புகார் அளித்த நடிகை ஒருவருக்கும் ஆதரவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story