பிரதமர் மோடிக்கு கடிதம் எதிரொலி; மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தடை இல்லை: கர்நாடகா அறிவிப்பு


பிரதமர் மோடிக்கு கடிதம் எதிரொலி; மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தடை இல்லை:  கர்நாடகா அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2021 6:51 PM GMT (Updated: 23 Feb 2021 6:51 PM GMT)

பிரதமர் மோடிக்கு கேரள முதல் மந்திரி கடிதம் எழுதியதன் எதிரொலியாக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை இல்லை என கர்நாடகா அறிவித்து உள்ளது.

பெங்களூரு,

நாட்டில் சமீப நாட்களாக மராட்டியம் மற்றும் கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.  இதுபற்றி கர்நாடக சுகாதார  மந்திரி சுதாகர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மராட்டியத்தில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரை தொற்றுக்கு ஆளாகின்றனர்.

கேரளாவில் சராசரியாக 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்படுகின்றன.  கர்நாடகா இந்த இரு மாநிலங்களின் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன.  அதனால், இந்த மாநிலங்களில் இருந்து வருபவர்கள் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா இல்லை என்ற சான்றிதழை கொண்டு வரவேண்டும் என கூறினார்.

இதனால் கர்நாடக எல்லையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.  கர்நாடகாவால் விதிக்கப்பட்ட புதிய பயண கட்டுப்பாடுகள் பற்றிய விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று கோரி கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய கர்நாடக சுகாதார  மந்திரி சுதாகர், கர்நாடகா மற்றும் கேரளா இடையேயான மாநில போக்குவரத்துக்கு கர்நாடகா தடை எதுவும் விதிக்கவில்லை என கூறினார்.

கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு வரும் பயணிகள் 72 மணிநேரத்திற்கு மிகாமல், ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

Next Story