கொரோனா காலத்தில் நாட்டின் மரியாதை உயர்ந்தது; இந்திய டாக்டர்களின் தேவை உலகம் முழுவதும் அதிகரிக்கும்; பிரதமர் மோடி கணிப்பு


கொரோனா காலத்தில் நாட்டின் மரியாதை உயர்ந்தது; இந்திய டாக்டர்களின் தேவை உலகம் முழுவதும் அதிகரிக்கும்; பிரதமர் மோடி கணிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2021 8:33 PM GMT (Updated: 23 Feb 2021 8:33 PM GMT)

கொரோனா காலத்தில் இந்திய சுகாதாரத்துறை மீதான மரியாதை உயர்ந்தது. வருங்காலத்தில், உலகம் முழுவதும் இந்திய டாக்டர்களின் தேவை அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

சுகாதாரத்துறை மீது அக்கறை
மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறை தொடர்பான அறிவிப்புகளை திறம்பட அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் பேசினார்.

அவர் பேசியதாவது:-
மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு தனித்துவமானது. சுகாதாரத்துறை மீது மத்திய அரசு கொண்டுள்ள அக்கறையை இது காட்டுகிறது. சுகாதார வசதி அனைவருக்கும் மலிவாக கிடைக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு.

4 முனைகளில் பணி
சுகாதாரத்துறையில் மத்திய அரசு முழுமையான அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது. சிகிச்சையில் மட்டுமின்றி ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறது. இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக, மத்திய அரசு ஒரே நேரத்தில் 4 முனைகளில் பணியாற்றி வருகிறது. நோயை தடுத்தல், ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்கச் செய்தல், சுகாதார உள்கட்டமைப்புகள் மற்றும் பணியாளர்களின் தரத்தையும், அளவையும் அதிகரித்தல் ஆகிய 4 முனைகளில் செயல்பட்டு வருகிறது.

காசநோய் ஒழிப்பு
கொரோனா காலத்தில், இந்திய சுகாதாரத்துறையின் வலிமையை உலகம் கவனித்துள்ளது. அதனால், இந்திய சுகாதாரத்துறையின் மதிப்பு அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில், இந்திய டாக்டர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களுக்கான கிராக்கி, உலகம் முழுவதும் அதிகரிக்கும். அதே சமயத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு கிராக்கி அதிகரிப்பதை எதிர்கொள்ள இந்தியா தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Next Story