சிறுத்தையுடன் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் கட்டிப்புரண்டு சண்டை


சிறுத்தையுடன் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் கட்டிப்புரண்டு சண்டை
x
தினத்தந்தி 23 Feb 2021 8:35 PM GMT (Updated: 23 Feb 2021 8:35 PM GMT)

அரிசிகெரே அருகே குடும்பத்தினரை காப்பாற்ற சிறுத்தையுடன் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் கட்டிபுரண்டு சண்டையிட்டார். இதில் சிறுத்தை செத்தது. இதனால் அனைவரும் உயிர் தப்பினர்.

ஹாசன்: 

அரிசிகெரே அருகே குடும்பத்தினரை காப்பாற்ற சிறுத்தையுடன் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் கட்டிபுரண்டு சண்டையிட்டார். இதில் சிறுத்தை செத்தது. இதனால் அனைவரும் உயிர் தப்பினர்.

மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்

ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா பானவரா கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் நாயக்கா. இவர் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராஜகோபால் நாயகா தனது மனைவி, மகளுடன் மோட்டார் சைக்கிளில் பெண்டகெரே நோக்கி சென்று கொண்டிருந்தார். 

அந்த சமயத்தில் ஒரு சிறுத்தை மோட்டார் சைக்கிளின் குறுக்கே வந்துள்ளது. இதனால் ராஜகோபால் நாயக்காவின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சிறுத்தை மீது மோதி கவிழ்ந்தது. இதனால் ராஜகோபால் நாயக்கா உள்பட 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர். 

சிறுத்தையுடன் கட்டிப்புரண்டு சண்டை

இதனால் ஆக்ரோஷம் அடைந்த சிறுத்தை, 3 பேரையும் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜகோபால் நாயக்கா, சிறுத்தையிடம் இருந்து குடும்பத்தினரை காப்பாற்ற சிறுத்தையுடன் கட்டி புரண்டு சண்டையிட்டார். பின்னர் சிறுத்தையை அவர் தலையில் பலமாக தாக்கி தூக்கி வீசினார்.
இதில் சிறுத்தை துடி, துடித்து செத்தது. 

இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் உயிர் தப்பினர். மேலும் சிறுத்தையுடன் சண்டையிட்டதில் ராஜகோபால் நாயக்கா பலத்த காயமடைந்தார். இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பண்டகெரே கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். 

தாய்-மகனை தாக்கிய சிறுத்தையா?

மேலும் சம்பவம் பற்றி அறிந்து அரிசிகெரே வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மனைவி, மகளை சிறுத்தை தாக்கியதால், குடும்பத்தினரை காப்பாற்ற சிறுத்தையை ராஜகோபால் நாயக்கா தாக்கியதும், அதில் சிறுத்தை உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து செத்துப்போன சிறுத்தையை பிரேதப் பரிசோதனை செய்து, அருகில் உள்ள காட்டுப்பகுதியில் வனத்துறையினர் புதைத்தனர். 

இதுறித்து பெண்டகெரே கிராம மக்கள் கூறுகையில், பெண்டகெரேயில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தான் பைரகொண்டனஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த தாய், மகனை சிறுத்தை தாக்கியது. அந்த சிறுத்தை தான், ராஜகோபால் நாயக்கா குடும்பத்தினரையும் தாக்கியது என்றும், இதில் குடும்பத்தை காப்பாற்ற ராஜகோபால் நாயக்கா தாக்கியதில் சிறுத்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. 

Next Story