தமிழக அரசின் நில கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிரான ரிட் மனுக்கள் மீதான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது


தமிழக அரசின் நில கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிரான ரிட் மனுக்கள் மீதான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது
x
தினத்தந்தி 23 Feb 2021 11:00 PM GMT (Updated: 23 Feb 2021 11:00 PM GMT)

தமிழக அரசின் நில கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிரான ரிட் மனுக்கள் மீதான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

மத்திய, மாநில அரசுகளின் சட்டங்கள்
அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில், நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு கொண்டுவந்தது.மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தில் இருந்து மாநில அரசின் நில கையகப்படுத்தும் சட்டங்களை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு 105(ஏ) என்ற சட்டப்பிரிவை சேர்த்து, நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டத்தை கொண்டு வந்தது.

விவசாயிகள் வழக்கு
தமிழக அரசின் இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருணாநிதி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தாக்கல் செய்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரித்தது. அதில், தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இந்த சட்டத்தின் கீழ் 2013-க்கு பின் மேற்கொள்ளப்பட்ட நில கையெடுப்பு நடவடிக்கைகள் ரத்து 
செய்யப்படுகின்றன என உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த அமர்வு, இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை விசாரிக்கவும் ஐகோர்ட்டுக்கு தடை விதித்தது.

புதிய சட்டம்
இதற்கிடையே, ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட சட்டத்தை உயிர்ப்பிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.மோகன்ராவ் உள்ளிட்ட 55 பேர் தாக்கல் செய்த பொதுநல மனுக்களை கான்வில்கர் அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசின் சார்பில் தலைமை வக்கீல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, ரத்து செய்யப்பட்ட சட்டத்தை உயிர்ப்பிக்கும் வகையிலான நிலம் கையகப்படுத்தும் புதிய சட்டம் செல்லும் என வாதிட்டார்.

ஒத்திவைப்பு
ரிட் மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் முரண்பட்ட சட்டங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர முடியும் என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் நில கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிரான ரிட் மனுக்கள் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Next Story