திருமணமான பெண் கற்பழித்து கொலை


திருமணமான பெண் கற்பழித்து கொலை
x
தினத்தந்தி 25 Feb 2021 9:48 PM GMT (Updated: 25 Feb 2021 9:48 PM GMT)

நஞ்சன்கூடு அருகே திருமணமான பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மைசூரு:

நஞ்சன்கூடு அருகே திருமணமான பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

3 பிள்ளைகளின் தாய்

  மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா அதிநாருமூலே கிராமத்தை சேர்ந்தவர் 26 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகி கணவர், 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த பெண், அடகனஹள்ளி பகுதியில் உள்ள ஐ.டி.சி. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 3 ஆண்டுகளா குத்தகை அடிப்படையில் பணியாற்றி வந்தார். இங்கு ஷிப்டு முறையில் அவர் பணியாற்றி வந்தார்.

  இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ஷிப்டுக்கு அந்த பெண் பணிக்கு வந்தார். பணி முடிந்து இரவு 8 மணி அளவில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மர்மநபர்கள், அந்த பெண்ணை வழி மறித்துள்ளனர்.

கற்பழித்து கொலை

  பின்னர் அவரை கட்டாயப்படுத்தி கடத்திச் சென்று அருகில் உள்ள புதருக்குள் வைத்து மாறி, மாறி கற்பழித்துள்ளனர். பின்னர் அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டனர். நேற்று முன்தினம் காலை ரத்த காயங்களுடன் கற்பழிக்கப்பட்ட நிலையில் பெண் பிணமாக கிடப்பதை பார்த்து அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  இதுகுறித்து தகவல் அறிந்ததும் நஞ்சன்கூடு புறநகர் போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர். வேலை முடிந்து வீடு திரும்பிய பெண்ணை, மர்மநபர்கள் கடத்திச் சென்று கற்பழித்துவிட்டு கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கொலை நடந்த இடத்தில் மதுபாட்டில்களும் கிடந்துள்ளது. இதனால் மதுகுடித்த மர்மநபர்கள் போதை தலைக்கேறியதும், வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

  இதற்கிடையே கொலையான பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நஞ்சன்கூடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக நஞ்சன்கூடு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  மேலும் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அத்துடன் கொலை சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றிய நபர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

  இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story