மியான்மரில் நிலவும் சூழலை கண்காணித்து வருகிறோம்: ஐநாவில் இந்தியா கருத்து
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1-ந்தேதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
ஜெனிவா,
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1-ந்தேதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது.
மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக அமெரிக்கா, மியான்மர் ராணுவத்தை வன்மையாக கண்டித்ததோடு மட்டுமல்லாமல் ராணுவ தலைவர்கள் மீது பொருளாதார தடைகளையும் விதித்தது.
இதற்கிடையில் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து அதேசமயம் மியான்மர் ராணுவம் இந்த போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் அவையில் மியான்மர் விவகாரம் குறித்து இந்தியாவுக்கான நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்தி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
“ மியான்மரில் சமீப காலங்களில் ஏற்படும் நிலவரங்களை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. தங்களுக்கு பிரச்சினைகளை அமைதியிலான மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் மியான்மர் தலைமை தீர்த்துக்கொள்ள வேண்டும். மியான்மருடன் இந்தியா நில மற்றும் கடற்பரப்பை பகிர்ந்து கொள்கிறது.
எனவே, அமைதி மற்றும் ஸ்திரதன்மையை உறுதி செய்வதில் நேரடி பங்கு உள்ளது. மியான்மருக்கும் அந்நாட்டுக்கு மக்களுக்கும் இந்தியா நெருங்கிய நண்பராக உள்ளது. எனவே, அங்குள்ள சூழலை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதோடு ஒத்த கருத்துடைய நாடுகளிடம் இது குறித்து தொடர்ந்து ஆலோசிப்போம். அப்போதுதான், மக்களின் நம்பிக்கை மற்றும் விருப்பங்கள் மதிக்கப்படும்” என்றார்.
Related Tags :
Next Story