அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை - மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பேச்சு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Feb 2021 7:06 AM GMT (Updated: 28 Feb 2021 7:06 AM GMT)

அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை என்றும், தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று என்று பிரதமர் மோடி, தனது மன் கி பாத் உரையில் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல், ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 

இதன்படி 74-வது முறையாக இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு  பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ். அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை. தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று. நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிகிறது. இந்திய அறிவியலின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நமது கனவுகளை நனவாக்க நாம் பிறரை சார்ந்து இருக்க வேண்டியது இல்லை.

மாணவர்கள் தேர்வு குறித்து அச்சம் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் செல்ல வேண்டும். இன்று தேசிய அறிவியல் தினம். விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் எழுதிய 'ராமன் விளைவு' கண்டுபிடிப்பிற்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நமது இளைஞர்கள் இந்திய விஞ்ஞானிகளைப் பற்றி நிறையப் படித்து இந்திய அறிவியலின் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹரித்வாரில் கும்பமேளா நடைபெற உள்ளது. மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோடை காலத்திற்காக மழைநீரை சேமிக்க வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வாருவதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும். கொரோனாவுக்கு எதிரான போரில், அஜாக்கிரதையுடன் இருக்க கூடாது” என்று கூறினார்.

மேலும் வாழைக்கழிவிலிருந்து ஏராளமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வருவதாக, மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

Next Story