புதுச்சேரி சபாநாயகர் பதவியில் இருந்து சிவக்கொழுந்து ராஜினாமா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Feb 2021 8:51 AM GMT (Updated: 28 Feb 2021 8:51 AM GMT)

புதுச்சேரி சபாநாயகர் பதவியில் இருந்து சிவக்கொழுந்து ராஜினாமா செய்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுச்சேரியில் காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்எல்ஏல்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், ஜான்குமார், திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

இதனைத்தொடர்ந்து நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, நியமன எம்எல்ஏக்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டதால், முதல்வர் நாராயணசாமியால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து குடியரசு தலைவர் ஆட்சி அங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த சூழலில் காரைக்காலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஜான்குமார், வெங்கடேசன், அருள்முருகன் உள்ளிட்டோர் இன்று பாஜகவில் இணைந்தனர். இவர்களுடன் சபாநாயகரின் சொந்தத் தம்பியான வி.பி.ராமலிங்கம் அவரது மகன் வி.சி.ரமேஷ் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர். 

இந்நிலையில் புதுச்சேரி சபாநாயகர் பதவியில் இருந்து சிவக்கொழுந்து ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் அவர் அளித்தார். அந்தக் கடிதத்தில், “எனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நான் வகிக்கும் சட்டப்பேரவைத் தலைவர் பதவியை மட்டும் என் சுய முடிவின்படி ராஜினாமா செய்கிறேன். இதனை இன்றே ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.  

Next Story