வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு


வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 28 Feb 2021 9:32 AM GMT (Updated: 28 Feb 2021 9:32 AM GMT)

பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் அவற்றை கண்காணிக்கவும் விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காகவும் 'அமேசோனியா - 1' செயற்கைக் கோள் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 செயற்கைக் கோள், இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் மற்றும் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்கள் என மொத்தம் 19 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

தற்போது பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்களும் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. தற்போது அனைத்து செயற்கைக் கோள்களும் சூரிய ஒத்திசைவு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “பி.எஸ்.எல்.வி சி-51 அமேசானியா -1 ஐ முதன்முறையாக வணிகரீதியில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ மற்றும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டுக்கும் எனது வாழ்த்துக்கள். இது நாட்டில் விண்வெளி சீர்திருத்தங்களின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்துகிறது. 18 சக செயற்கைக் கோள்களுடன் நான்கு சிறிய செயற்கைக்கோள்களும் இருந்தன, அவை நம் இளைஞர்களின் சுறுசுறுப்பையும், புதுமையையும் வெளிப்படுத்துகின்றன.

பி.எஸ்.எல்.வி-சி 51 பிரேசிலின் அமேசானியா -1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு ஜனாதிபதி போல்சனாரோவுக்கு வாழ்த்துக்கள். இது எங்கள் விண்வெளி ஒத்துழைப்பின் ஒரு வரலாற்று தருணம் மற்றும் பிரேசில் விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.





Next Story