பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்


பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்
x
தினத்தந்தி 2 March 2021 7:17 PM GMT (Updated: 2 March 2021 7:17 PM GMT)

பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் இந்திய விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரை இறங்கியது.

கராச்சி, 

இந்தியாவின் இண்டிகோ விமானம் ( 6இ1412) ஷார்ஜாவில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோ நகரத்துக்கு நேற்று வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, 67 வயதான ஹபீப் உர் ரகுமான் என்ற பயணி நெஞ்சு வலியால் தவித்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து விமான சிப்பந்திகள், விமானிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே விமானத்தை அவசரமாக பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகருக்கு திருப்பி தரை இறக்க விரும்பினார். அதற்கான அனுமதியை கோரியபோது, பாகிஸ்தான் வழங்கியது.

அதன்படி, அந்த விமானம் கராச்சி நகரத்தின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் அதிகாலை 5 மணிக்கு அவசரமாக தரை இறக்கப்பட்டது. அங்கு தயார் நிலையில் இருந்த விமான நிலைய டாக்டர்கள் குழு, அந்த பயணிக்கு சிகிச்சை அளிக்க விமானத்துக்குள் சென்றது.

ஆனால் அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து போய் விட்டது தெரிய வந்தது. எனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் குழு அறிவித்தது.
கராச்சியில் நடைமுறைகள் முடிந்த பின்னர் அந்த விமானம் காலை 8.36 மணிக்கு ஆமதாபாத் புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

Next Story