இந்தியா முழுவதும் இதுவரை 1.90 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்


இந்தியா முழுவதும் இதுவரை 1.90 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 5 March 2021 5:01 PM GMT (Updated: 5 March 2021 5:01 PM GMT)

இந்தியா முழுவதும் இதுவரை 1.90 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவுக்கு எதிராக உலக அளவில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை கடந்த ஜனவரி 16-ந்தேதி இந்தியா தொடங்கியது. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.

இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக கடந்த 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்களில் நடந்து வரும் இந்த தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் மாலை 7 மணி வரை 10,34,672 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 1,90,40,175 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் 68,96,529 சுகாதார பணியாளர்கள் (முதல் டோஸ்), 32,94,612 சுகாதார பணியாளர்கள் (2-வது டோஸ்) பெற்றிருக்கின்றனர். இதைப்போல 62,94,755 முன்கள வீரர்கள் (முதல் டோஸ்), 1,23,191 முன்கள வீரர்கள் (2-வது டோஸ்) தடுப்பூசி போட்டிருக்கின்றனர்.

60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை பொறுத்தவரை 21,17,862 பேர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் 3,13,226 பேர் முதல் டோஸ் பெற்றிருக்கின்றனர்.

Next Story