வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராடுவோம் - பிரியங்கா காந்தி


வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராடுவோம் - பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 7 March 2021 12:33 PM GMT (Updated: 7 March 2021 12:46 PM GMT)

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை போராடுவோம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

லக்னோ,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 28-ந்தேதி முதல் நடந்து வரும் இந்த போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது.

போராட்டம் தொடங்கி 100 நாட்களை கடந்த போதும் இந்த விவகாரத்தில் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் உறுதியாக உள்ளனர். 

சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும், அது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பிற்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு 
தெரிவித்துள்ளன.

இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் இன்று நடைபெற்ற கிசான் மகாபஞ்சாயத் நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நம்பிக்கையை இழக்காதீர்கள், 100 நாட்கள் ஆகியுள்ளது. 100 வாரங்கள் அல்லது 100 மாதங்கள் ஆனாலும் சரி... மத்திய அரசு இந்த கருப்பு சட்டங்களை திரும்பப்பெறும் வரை நாங்கள் உங்களுடன் இணைந்து போராடுவோம்’ என்றார். 

Next Story