திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் தேவஸ்தான அதிகாரி தகவல்


திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் தேவஸ்தான அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 8 March 2021 1:23 AM GMT (Updated: 8 March 2021 1:23 AM GMT)

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பே வாங்கிய கொரோனா சான்றிதழ் கட்டாயம் என தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருமலை,

திருமலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.

அதன்படி திருமலை அன்னமயபவனில் தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி பங்கேற்று பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலமாக குறைகளை கேட்டார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-

ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த(ஏப்ரல்) மாதம் 14-ந்தேதியில் இருந்து தரிசன அனுமதி வழங்கப்படும்.

கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குலுக்கல் முறையிலான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் முழுமையாக வழங்கப்படும்.

பஞ்ச காவ்யா தயாரித்த பொருட்களை கோவிலில் விற்பனை செய்யவும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பசு பாதுகாப்புக்காகப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும்போது 72 மணி நேரத்துக்கு முன்பே கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்று வர வேண்டும்.

கொரோனா தொற்று இல்லை என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

திருமலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பசுமை ஆற்றலை உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை மட்டுமே அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக 150 மின்சாரப் பஸ்களை இயக்கும் முயற்சியை அரசு போக்குவரத்துக்கழகம் மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘கடந்த பிப்ரவரி மாதம் 14 லட்சத்து 41 ஆயிரம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ₹90 கோடியே 45 லட்சம் கிடைத்தது. இ.உண்டியல் மூலம் கிடைத்த வருமானம் ₹3 கோடியே 51 லட்சம். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு இ.உண்டியல் மூலம் கிடைத்த வருமானம் ₹12 லட்சம் ஆகும். ஸ்ரீவாரி லட்டுக்கள் 76 லட்சத்து 61 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அன்னப்பிரசாத் சாப்பிட்ட பக்தர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 7 ஆயிரம் பேர். 6 லட்சத்து 72 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்’ என்றார்.


Next Story