கொல்கத்தாவில் ரயில்வே அலுவலகத்தில் தீ விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி


கொல்கத்தாவில் ரயில்வே அலுவலகத்தில் தீ விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 9 March 2021 4:54 AM GMT (Updated: 9 March 2021 4:54 AM GMT)

கொல்கத்தாவில் ரயில்வே அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஸ்டிராண்ட் சாலையில் உள்ள 13 மாடிகள் கொண்ட  கட்டிடம் ஒன்றில் திடீரென நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.  இதுபற்றிய தகவலறிந்து, 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றன.  

அவர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமுடன் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் 4 தீயணைப்பு வீரர்களும், துணை காவல் ஆய்வாளர் ஒருவரும், ரயில்வே ஊழியர்கள் இருவரும் அடங்குவர். இந்த விபத்து மேற்குவங்கத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் ரயில்வே அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்  தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும், விபத்தில் காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story