திரிணாமுல் காங்கிரசின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு


திரிணாமுல் காங்கிரசின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு
x
தினத்தந்தி 12 March 2021 8:47 AM GMT (Updated: 12 March 2021 8:47 AM GMT)

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபைக்கு மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.  மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

தனது சொந்த தொகுதியான பவானிப்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த மம்தா பானர்ஜி இந்த முறை நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.  இதே தொகுதியில், கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த சுவேந்து அதிகாரி பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.

பவானிப்பூரில் லோக்கல் பூத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குறைவான வாக்குகளை பெற்றது மம்தாவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.  இதனாலேயே, அவர் நந்திகிராமில் போட்டியிடுகிறார்.  அவர் தோற்கடிக்கப்படுவார் என சுவேந்து அதிகாரி கூறினார்.

இந்நிலையில், ஹல்டியா பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து மாலையில் பர்பா மேதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள சென்றார்.  அங்குள்ள கோயிலுக்கு வெளியே காரின் அருகே மம்தா நின்றிருந்தபோது, அவரை 4, 5 பேர் தாக்கியதாக மம்தா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். இதில் காலில் காயமடைந்த மம்தாவை பாதுகாவலர்கள் தூக்கி காரில் ஏற்றி சென்றனர்.  பின்பு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மம்தா பானர்ஜி காலிகாட்டில் வெளியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.  அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு காயம் ஏற்பட்ட நிலையில், கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் (மார்ச் 14ந்தேதி) ஞாயிற்று கிழமை வெளியிடப்படுகிறது என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Next Story