தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓமன் வளைகுடாவில் தவித்த சரக்கு கப்பலுக்கு இந்திய கடற்படை உதவி


தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓமன் வளைகுடாவில் தவித்த சரக்கு கப்பலுக்கு இந்திய கடற்படை உதவி
x
தினத்தந்தி 12 March 2021 10:23 PM GMT (Updated: 12 March 2021 10:23 PM GMT)

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓமன் வளைகுடாவில் தவித்த சரக்கு கப்பலுக்கு இந்திய கடற்படை உதவி செய்தது.

இந்திய மாலுமிகள்
ஓமனில் இருந்து ஈராக்குக்கு கடந்த 9-ந் தேதி எம்.வி. நயான் என்ற சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. இதில் இந்திய மாலுமிகள் 7 பேர் பணியில் இருந்தனர்.இந்த கப்பல் ஓமன் வளைகுடா பகுதியில் சென்றபோது திடீரென கப்பலில் கோளாறு ஏற்பட்டது. இதனால் கப்பலின் உந்துவிசை, மின் உற்பத்தி அலகுகள் போன்றவை செயலிழந்தன. இதனால் கப்பல் நடுக்கடலில் தத்தளித்தது.எனவே ஓமன் வளைகுடா பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். தல்வாருக்கு உடனடியாக இது குறித்து அபாய அழைப்பு அனுப்பப்பட்டது.

ஐ.என்.எஸ். தல்வார்
இதைத்தொடர்ந்து ஐ.என்.எஸ். தல்வாரில் பணியில் இருந்த இந்திய கடற்படை தொழில்நுட்ப வல்லுனர்கள், அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று படகு மூலம் சரக்கு கப்பலை அடைந்தது.பின்னர் அவர்கள் எம்.வி.நயான் கப்பலில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை நீக்கும் பணியில் இறங்கினர். 7 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த பணிகளின் பலனாக, கப்பலில் ஏற்பட்டிருந்த கோளாறுகள் சரி செய்யப்பட்டன.

பயணத்தை தொடர்ந்தது
குறிப்பாக கப்பலில் இருந்த ஜெனரேட்டர்கள், பிரதான என்ஜின் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பழுதுநீக்கும் பணிகள் நடந்தன.இந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து சரக்கு கப்பல் ஈராக் நோக்கிய தனது பயணத்தை மீண்டும் தொடர முடிந்தது. இதன் மூலம் அது தனது அடுத்த துறைமுகத்தை நோக்கி சென்றதாக இந்திய கடற்படை கூறியுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓமன் வளைகுடாவில் சிக்கித்தவித்த சரக்கு கப்பலுக்கு உதவி செய்த இந்திய கடற்படையின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Next Story