காஷ்மீர்: போலீஸ் சோதனைச்சாவடி மீது கையெறி குண்டு வீச்சு - 2 போலீசார் காயம்


காஷ்மீர்: போலீஸ் சோதனைச்சாவடி மீது கையெறி குண்டு வீச்சு - 2 போலீசார் காயம்
x
தினத்தந்தி 13 March 2021 11:58 AM GMT (Updated: 13 March 2021 11:58 AM GMT)

காஷ்மீரில் போலீஸ் சோதனைச்சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோர்ப்பூர் பஸ் நிலையம் அருகே போலீஸ் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனைச்சாவடியை குறிவைத்து இன்று பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதலை நடத்தினர். பயங்கரவாதிகளின் தாக்குதல் குறி தவறி சோதனைச்சாவடிக்கு அருகே கையெறி குண்டு விழுந்து வெடித்தது.

ஆனாலும், இந்த தாக்குதலில் சோதனைச்சாவடி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அசாத் அகமது மற்றும் முகமது அப்சல் ஆகியோருக்கு சிறு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் காயமடைந்த போலீசாரை மீட்டு ராணுவ மருத்துவ மையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். காயமடைந்த போலீசாரின் நிலைமை தற்போது சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர், போலீஸ் சோதனைச்சாவடி மீது கையெறி குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

Next Story