மேற்கு வங்காள தேர்தல்: மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் அமர்ந்து பேரணியில் பங்கேற்பு


மேற்கு வங்காள தேர்தல்:  மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் அமர்ந்து பேரணியில் பங்கேற்பு
x
தினத்தந்தி 14 March 2021 2:20 AM GMT (Updated: 14 March 2021 2:20 AM GMT)

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் மந்திரி மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி காந்தி மூர்த்தி பகுதியில் இருந்து ஹஜ்ரா வரை பேரணியில் கலந்து கொள்கிறார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபைக்கு வருகிற 27ந்தேதி தொடங்கி ஏப்ரல் 29ந்தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.  மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

தனது சொந்த தொகுதியான பவானிப்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த முதல் மந்திரி மம்தா இந்த முறை நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.  இதே தொகுதியில் பா.ஜ.க. சார்பில், கடந்த ஆண்டு நவம்பரில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

பவானிப்பூரில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவில் லோக்கல் பூத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குறைவான வாக்குகளை பெற்றது மம்தாவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.  இதனாலேயே, அந்த தொகுதியை தவிர்த்து விட்டு அவர் நந்திகிராமில் போட்டியிடுகிறார்.  அவர் தோற்கடிக்கப்படுவார் என சுவேந்து அதிகாரி கூறினார்.

இந்நிலையில், ஹல்டியா பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை மம்தா பானர்ஜி கடந்த புதன்கிழமை தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து மாலையில் பர்பா மேதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள சென்றார்.  அங்குள்ள கோயிலுக்கு வெளியே காரின் அருகே மம்தா நின்றிருந்தபோது, அவரை 4, 5 பேர் தாக்கியதாக மம்தா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். இதில் காலில் காயமடைந்த மம்தாவை பாதுகாவலர்கள் தூக்கி காரில் ஏற்றி சென்றனர்.  பின்பு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன்பின் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார்.  இந்த நிலையில், தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரசார பணிகளில் ஈடுபட மம்தா திட்டமிட்டு உள்ளார்.  இதற்காக அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி காந்தி மூர்த்தி பகுதியில் இருந்து ஹஜ்ரா நோக்கி இன்று நடைபெறும் பேரணியில் கலந்து கொள்கிறார்.  இன்று மதியம் நடைபெறும் பொது பேரணியில் அவர் உரையாற்ற உள்ளார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வட்டாரம் தெரிவித்து உள்ளது.

Next Story