திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு ரத்து


திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு ரத்து
x
தினத்தந்தி 14 March 2021 4:08 AM GMT (Updated: 14 March 2021 4:08 AM GMT)

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.  மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

முதல் மந்திரி மம்தா பானர்ஜி தனது சொந்த தொகுதியான பவானிப்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த நிலையில் இந்த முறை நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.  இதே தொகுதியில் பா.ஜ.க. சார்பில், கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், ஹல்டியா பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்ற மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை கடந்த புதன்கிழமை தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து மாலையில் பர்பா மேதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள சென்றார்.  அங்குள்ள கோயிலுக்கு வெளியே காரின் அருகே நின்றிருந்தபோது, தன்னை சிலர் தாக்கினர் என மம்தா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். இதில் காலில் காயமடைந்த மம்தாவை பாதுகாவலர்கள் காரில் ஏற்றி சென்றனர்.  பின்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில், தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரசார பணிகளில் ஈடுபட மம்தா திட்டமிட்டு உள்ளார்.  இதற்காக அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி காந்தி மூர்த்தி பகுதியில் இருந்து ஹஜ்ரா நோக்கி இன்று நடைபெறும் பேரணியில் கலந்து கொள்கிறார்.  இன்று மதியம் நடைபெறும் பொது பேரணியில் அவர் உரையாற்ற உள்ளார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வட்டாரம் தெரிவித்து உள்ளது.

அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை மம்தா பானர்ஜி கடந்த 11ந்தேதி காலிகாட்டில் வெளியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், மம்தாவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.  இதன்பின்னர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மார்ச் 14ந்தேதி (இன்று) வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் அமர்ந்து, பொது பேரணியில் இன்று மதியம் கலந்து கொள்ள இருக்கிறார் என தகவல் வெளியான நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.  அடுத்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  தேர்தல் அறிக்கை வெளியிடுவதிலேயே அக்கட்சி திணறி வருவது அரசியல் பிரமுகர்களிடையே ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.

Next Story