ஹரித்வார் கும்பமேளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்


ஹரித்வார் கும்பமேளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 22 March 2021 12:29 AM GMT (Updated: 22 March 2021 12:29 AM GMT)

ஹரித்வாரில் நடைபெறும் கும்பமேளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க உத்தரகாண்ட் அரசை மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து உள்ளது. சமீப நாட்களாக நாள்தோறும் 40 ஆயிரத்துக்கு அதிகமானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இவ்வாறு பல மாநிலங்களில் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாக மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் உத்தரகாண்ட் அரசு ஹரித்வாரில் கும்பமேளாவை நடத்தி வருகிறது. இதை முன்னிட்டு மத்திய குழு ஒன்று ஹரித்வாரில் ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

அந்த அறிக்கையில் ஹரித்வாரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என கூறப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 10 முதல் 20 பக்தர்கள் மற்றும் 10 முதல் 20 உள்ளூர்வாசிகள் தினமும் தொற்றுக்கு ஆளாவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து உத்தரகாண்ட் அரசுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மத்திய குழு தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் வலுவான கவலையை பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதால் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மூலம் கும்பமேளா பகுதியில் தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

எனவே உத்தரகாண்ட் அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை ராஜேஷ் பூஷண் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். குறிப்பாக கும்பமேளா நடைபெறும் பகுதியில் பரிசோதனைகளை அதிகரிப்பது, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றுவது, பக்தர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Next Story