பஞ்சாபில் புதிதாக ஏற்படும் பாதிப்புகளில் 81% உருமாறிய கொரோனா: முதல்வர் அமரீந்தர் சிங் தகவல்


பஞ்சாபில் புதிதாக ஏற்படும் பாதிப்புகளில் 81% உருமாறிய  கொரோனா: முதல்வர் அமரீந்தர் சிங் தகவல்
x
தினத்தந்தி 23 March 2021 10:47 AM GMT (Updated: 23 March 2021 10:47 AM GMT)

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

அமிர்தசரஸ்,

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மராட்டியம், கேரளா, குஜராத், பஞ்சாப், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தாலும் , கொரோனா பரவலும் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதனால்,  தொற்று பரவல் அதிகம் உள்ள பல முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு எனபன போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  இந்தநிலையில் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கொரோனா பரவல் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை பஞ்சாப் முதல்வர் அலுவலகம்  வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

பஞ்சாபில் அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் காரணம். புதிய நோயாளிகளில் 81 சதவீதம் பேர் உருமாறிய கொரோனா ரைவஸ் மூலமே பாதிக்கப்பட்டுள்ளனர்.  அண்மையில் 401 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அதில் 81 சதவீதம் உருமாறிய கொரோனா வைரஸ்(B117) பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டன் சென்று வந்த பஞ்சாப் இளைஞர்களிடம் இந்த வைரஸ் அதிகமாக பரவியுள்ளது. 60 வயக்கும் குறைவானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தான் இதற்கு  தீர்வாக இருக்கும். எனவே  இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்”என்றார். 


Next Story