கொரோனா பாதிப்பு; நாக்பூரில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை


கொரோனா பாதிப்பு; நாக்பூரில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை
x
தினத்தந்தி 26 March 2021 10:23 AM GMT (Updated: 26 March 2021 10:23 AM GMT)

மராட்டியத்தின் நாக்பூர் நகரில் கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நாக்பூர்,

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புகள் பரவலாக அதிகரிக்க தொடங்கிய பின்னர் நாட்டில் அதிகம் பாதித்த மாநிலங்களில் முதல் இடத்தில் மராட்டியம் இடம் பெற்றது.  மராட்டியத்தின் மும்பை, நாக்பூர், புனே உள்ளிட்ட நகரங்கள் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சரிவை நோக்கி சென்ற தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் உச்சம் பெற்று வருகிறது.  இன்று ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த ஆண்டில் முதல்முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 60 ஆயிரம் எண்ணிக்கையை நெருங்கியுள்ளது அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இவற்றில், மராட்டியத்தில் மீண்டும் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.  மராட்டியத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25.64  லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்து உள்ளது.

இதனால் தடுப்பூசி போடும் பணிகள் உள்பட தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்றால் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டு வருகிறது.  இதேபோன்று, நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 15ந்தேதி முதல் 21ந்தேதி வரை ஒரு வார கால ஊரடங்கு உத்தரவு அமலானது.

இவை தவிர அமராவதி, யவத்மல் மற்றும் லத்தூர் போன்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் முன்பே விதிக்கப்பட்டு விட்டன.

தொற்று அதிகரிப்பினை முன்னிட்டு மராட்டியத்தில் திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவை கொரோனா தொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.

காய்ச்சல் உள்ள நபர்களை அனுமதிக்க தடை விதிப்பது, போதிய அளவுக்கு சேனிட்டைசர்களை (கை கழுவ உபயோகப்படும் திரவம்) பல்வேறு இடங்களில் வைப்பது, முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை கடைகளுக்கு வருகை தரும் அனைத்து வாடிக்கையாளர்களும் பின்பற்றுகின்றனர் என உறுதி செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று பண்டிகை கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.  வருகிற 29ந்தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மராட்டியத்தின் நாக்பூர் நகரில் அதற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

இதுபற்றி நாக்பூர் நகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் கூறும்பொழுது, நாக்பூரில் மார்க்கெட்டுகள், ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் உள்ளிட்டவை வருகிற 29ந்தேதி முழுவதும் அடைக்கப்படும்.

அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளான காய்கறி கடைகள், சிக்கன் உள்ளிட்ட அசைவ கடைகள் மதியம் 1 மணிவரை திறந்திருக்க அனுமதி வழங்கப்படும்.  பொதுமக்கள் வருகிற 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்கள் ஒன்றாக கூடுவதற்கோ அல்லது கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கோ தடை விதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story