அசாம்,மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது


அசாம்,மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல்: முதல் கட்ட  வாக்குப்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 27 March 2021 1:32 AM GMT (Updated: 27 March 2021 1:32 AM GMT)

மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் இன்று (சனிக்கிழமை) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கொல்கத்தா, 

அசாம், மேற்கு வங்காள சட்டமன்ற  தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு  காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 191 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலுக்கான போட்டியில் உள்ளனர். இவர்களின் எதிர்காலத்தை 73 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இன்று தீர்மானிக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 10,288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இன்றைய தேர்தல் நடைபெறும் தொகுதிகள், பெரும்பாலும் நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்த பகுதியாக விளங்கி வந்த இடத்தை சேர்ந்தவை என்பதால் அந்த பகுதிகளில்பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

இதைப்போல அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களில் இன்று வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது. குறிப்பாக அப்பர் அசாம் மற்றும் பிரம்மபுத்ரா நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ள 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட 47 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது. இங்கு 23 பெண்கள் உள்பட 264 வேட்பாளர்களின் எதிர்காலம் இன்று தீர்மானிக்கப்படுகிறது.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியதில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.   மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. கொரோனா காலம் என்பதால் 1 மணி நேரம்  வாக்குப்பதிவு செய்யும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Next Story