ராணுவ வினாத்தாள் கசிவு வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது ஏன்? தலைமை தளபதி விளக்கம்


ராணுவ வினாத்தாள் கசிவு வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது ஏன்? தலைமை தளபதி விளக்கம்
x
தினத்தந்தி 30 March 2021 2:06 PM GMT (Updated: 30 March 2021 2:06 PM GMT)

ராணுவ வினாத்தாள் கசிவு வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது ஏன்? என்பது பற்றி ராணுவ தலைமை தளபதி இன்று விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ராணுவத்திற்கு தகுதியுள்ள வீரர்களை சேர்ப்பதற்கான பொது நுழைவு தேர்வில் வினாத்தாள் கசிந்தது என குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த விவகாரம் பற்றி புனே நகர போலீசார் மற்றும் ராணுவ நுண்ணறிவு அமைப்பினர் இணைந்து கூட்டாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த முறைகேட்டில், முன்னாள் ராணுவ அதிகாரிகளும் தொடர்பில் உள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.  அவர்களை பிடித்து இந்த மாத தொடக்கத்தில் விசாரணை நடத்தப்பட்டது.  தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு ராணுவத்தில் பணி உறுதி என்ற வாக்குறுதியின் அடிப்படையில் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் தரும்படி கேட்டுள்ளனர்.

ஒரு சிலர் தேர்வுக்கு முன்பே ரூ.1 லட்சம் முன்பணம் கொடுத்து விட்டனர்.  பணி நிரந்தரம் ஆனவுடன் மீதமுள்ள ரூ.1 லட்சம் பணம் தர முடிவு செய்திருந்தனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி புனே நகர போலீசின் இணை கமிஷனர் ரவீந்திரா ஷிஸ்வே கூறும்பொழுது, இந்த வழக்கில் 2 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டன.  10 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  வழக்கு விசாரணையில், ராணுவத்தில் பணிபுரிந்து வரும் 2 அதிகாரிகள் மற்றும் 2 முன்னாள் ராணுவ அதிகாரிகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் உள்ளனர்.  அவர்களில் ராணுவ பயிற்சி மையங்கள் நடத்தியவர்களும் உள்ளனர்.

அவர்களுக்கு எப்படி ராணுவ ஆள்சேர்ப்புக்கான வினாத்தாள் கிடைத்தது என்பது பற்றி நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.  இதில் வேறு யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் விசாரணை நடந்து வருகிறது என கூறினார்.

இந்நிலையில், இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் ஆள்சேர்ப்பு நடைமுறையில் ஊழல் நடைபெற்றுள்ளது என்பதனை இந்திய ராணுவம் எந்த அளவிலும் சகித்து கொள்ளாது.  அதனை ஏற்று கொள்ள முடியாது.

ராணுவ நுண்ணறிவு அமைப்புகளின் அதிரடி நடவடிக்கையின் அடிப்படையில், ராணுவ தேர்வு மையம் ஒன்றில் ஆட்களை தேர்வு செய்யும் நடைமுறையில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான சாத்தியம் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  இதுபற்றிய விசாரணையில் பல்வேறு அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.  எனினும், இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என கடந்த 14ந்தேதி இந்திய ராணுவம் தெரிவித்தது.

இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில், சி.பி.ஐ. அமைப்பிடம் ராணுவ வினாத்தாள் கசிவு வழக்கு ஏன் ஒப்படைக்கப்பட்டது என்பது பற்றி ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவானே இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.  அதில், ராணுவ வீரர்கள் ஆட்சேர்ப்பில் வினாத்தாள் கசிந்தது மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான தேர்வு நடைமுறை என இரண்டு விசயங்களிலும் சில சம்பவங்கள் நடந்துள்ளன.

ராணுவ சேவைக்கான தேர்வு வாரிய பணியாளர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.  எங்களுடைய தனிப்பட்ட விசாரணையில் இந்த இரு விசயங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.  இந்த வழக்குகளில், வேறு சில அமைப்புகளுக்கும் தொடர்புள்ளன என நாங்கள் உணர்ந்தோம்.  பொதுமக்கள் தொடர்பில் உள்ளனர்.  வங்கிகளுக்கு பணபரிமாற்றங்கள் நடந்துள்ளன.  தொலைபேசி பதிவுகள் ஆராயப்பட வேண்டும்.

இந்த வகையில் விசாரணை மேற்கொள்ள எங்களுக்கு அதிகாரமில்லை.  அதனால் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பது என முடிவு செய்தோம் என்று கூறியுள்ளார்.

Next Story