குஜராத்தில் ஐ.ஐ.எம். ஆமதாபாத்தில் மொத்தம் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
குஜராத்தில் ஐ.ஐ.எம். ஆமதாபாத்தில் மொத்தம் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஆமதாபாத்,
நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கும் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள ஐ.ஐ.டி. புவனேஸ்வரில் 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதுபற்றி ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிக்கப்பட்ட 10 மாணவர்களும் ஐ.ஐ.டி.யில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமில் வைக்கப்பட்டு கவனிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள் அடங்கிய அடுத்த குழுவின் வருகை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட பின்பு கொரோனாவில் இருந்து ஐ.ஐ.டி. வளாகம் விடுபட்டு உள்ளது. ஒரு சிலர் தனிமைப்படுத்தும் முகாமில் உள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
வளாகத்திற்கு முதலில் வந்த 3 குழுக்களில் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால், 4வது வந்த மாணவர் குழுவில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற 7 பேருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து ஐ.ஐ.டி.க்கு திரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்பின்னர் 15 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலிலும் மாணவர்கள் வைக்கப்படுகின்றனர்.
இந்த கட்டாய தனிமைப்படுத்துதலில் மாணவர்களின் உடல்நலன் கவனிக்கப்படுவதுடன், தனிமைப்படுத்திய மாணவருக்கு உணவும் வழங்கப்படுகிறது.
இதேபோன்று, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர் ஒருவர் உள்பட 40 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதேபோன்று, காந்திநகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப மையத்தின் 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டில் இருந்து அனைத்து கல்வி சார்ந்த நடவடிக்கைகளும் ஆன்லைன் வழியே நடந்து வருகின்றன. ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வளாகத்திற்குள் வசிக்கும் அனைவருக்கும் முன்னெச்சரிக்கை வழிகாட்டி நெறிமுறைகளை அவ்வப்பொழுது பகிர்ந்து வருகிறோம் என கல்வி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
குஜராத்தில் ஐ.ஐ.எம். ஆமதாபாத்தில் மொத்தம் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 86 பேர் மாணவர்கள். 4 பேர் ஆசிரியர்கள். வளாகத்திற்குள் பணியாற்றும் ஊழியர்கள் 14 பேருக்கும், வளாகத்திற்கு வெளியே இருந்து வரும் பணியாளர்கள் 27 பேருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
இதேபோன்று, ஒப்பந்த பணியாளர்கள் 19 பேருக்கும், மற்றவர்கள் 41 பேருக்கும் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
இவர்களில் மொத்தம் 137 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். அவர்களில் 45 பேர் மாணவர்கள். 3 பேர் ஆசிரியர்கள். வளாக ஊழியர்கள் 14 பேர் மற்றும் வெளியில் இருந்து வளாகத்திற்குள் வரும் 21 ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 18 பேர் குணமடைந்து உள்ளனர். இவர்கள் தவிர மற்ற உறுப்பினர்கள் 36 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். மொத்தம் 54 பேர் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story