உயிருக்கு பயந்து தலைமறைவாக இருந்தேன் என்னை யாரும் கடத்தி செல்லவில்லை; போலீசாரிடம் இளம்பெண் தகவல்


ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்படும் இளம்பெண்.
x
ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்படும் இளம்பெண்.
தினத்தந்தி 30 March 2021 9:28 PM GMT (Updated: 30 March 2021 9:28 PM GMT)

உயிருக்கு பயந்து தலைமறைவாக இருந்தேன் என்றும், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் போலீசாரிடம் இளம்பெண் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: உயிருக்கு பயந்து தலைமறைவாக இருந்தேன் என்றும், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் போலீசாரிடம் இளம்பெண் தெரிவித்துள்ளார்.

இளம்பெண்ணிடம் விசாரணை

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரத்தில் தலைமறைவாக இருந்த இளம்பெண், நேற்று நீதிபதி முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

அதைத்தொடர்ந்து, இளம்பெண்ணிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை சிறப்பு விசாரணை குழு போலீசார் அழைத்து சென்றார்கள். மடிவாளாவில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்தில் வைத்து இளம்பெண்ணிடம், விசாரணை அதிகாரியான கவிதா தலைமையிலான போலீசார் 2 மணிநேரத்திற்கும் மேலாக விசாரித்து தகவல்களை பெற்றுக் கொண்டனர்.

யாரும் கடத்தவில்லை

அப்போது ஆபாச வீடியோ விவகாரத்தில் தலைமறைவாக இருந்தது ஏன்?, இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதற்கு ஆபாச வீடியோ விவகாரம் வெளியான பின்பு ரமேஷ் ஜார்கிகோளி மூலமாக தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், தலைமறைவாக இருந்தேன் என்று போலீசாரிடம் இளம்பெண் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் கடத்தப்பட்டு இருப்பதாக பெற்றோர் புகார் அளித்திருப்பது குறித்தும் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தனது பெற்றோர் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர் கூறியபடியே நான் கடத்தப்பட்டு இருப்பதாக அவர்கள் போலீசில் புகார் அளித்திருப்பதாகவும் இளம்பெண் போலீசாரிடம் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தனக்கு உரிய பாதுகாப்பு இல்லாததால் தலைமறைவாக இருந்து வந்தேன், தற்போது நீதிபதியிடம் வாக்குமூலம் அளிப்பதற்காக பெங்களூருவுக்கு வந்துள்ளேன் என்றும் இளம்பெண் கூறியதாக தெரிகிறது.

வீடியோ எடுத்தது ஏன்?

அதே நேரத்தில் ஆபாச வீடியோவில் இருப்பது நீங்கள் தானா?, அந்த ஆடியோவில் பேசி இருப்பது உங்களது குரல் தானா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டது. அத்துடன் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் ஜார்கிகோளி கற்பழித்திருப்பதாக புகார் அளித்துள்ளீர்கள், அப்படி அவர் கற்பழித்ததாக கூறினால், அந்த சந்தர்ப்பத்தில் வீடியோ எதற்காக எடுக்கப்பட்டது. வீடியோ எடுத்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.

ஆனால் வீடியோ எடுத்தது குறித்து இளம்பெண், போலீசாரிடம் சரியான பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் பற்றியும், தலைமறைவாக உள்ள நரேஷ்கவுடா, ஸ்ரவன் குறித்தும் இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர். அத்துடன் ரமேஷ் ஜார்கிகோளியிடம் இருந்து பணம் எதுவும் வாங்கினீர்களா? என்பது குறித்தும் இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இன்று மீண்டும் விசாரணை

போலீசார் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு இளம்பெண் சரியாக பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டிய இருப்பதாலும், சம்பவம் நடந்த பகுதிக்கு அழைத்து செல்ல வேண்டி இருப்பதாலும் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு ஆஜராகும்படி இளம்பெண்ணுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதனால் இன்று மீண்டும் இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

விசாரணை முடிந்த பின்பு இளம்பெண்ணை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தடயவியல் ஆய்வகத்தில் இருந்து போலீசார் அழைத்து சென்றார்கள். பெண்கள் பாதுகாப்பு மையம் அல்லது ஆர்.டி.நகரில் உள்ள தங்கும் விடுதியில் நேற்று இரவு இளம்பெண் தங்குவதற்கு போலீசார் அனுமதி அளித்திருப்பதுடன், அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இளம்பெண் தங்கும் இடம் பற்றி போலீசார் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டார்கள்.

ஆவணங்களை வழங்கிய இளம்பெண்

இளம்பெண்ணிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு சாட்சி, ஆவணங்களை வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ரமேஷ் ஜார்கிகோளி தன்னுடன் பேசியது தொடர்பான செல்போன் அழைப்புகள், வாட்ஸ்-அப் மூலமாக பேசிய வீடியோ அழைப்புகள் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை இளம்பெண், போலீசாரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் ரமேஷ் ஜார்கிகோளி கொடுத்ததாக கூறி சில பரிசு பொருட்களையும் இளம்பெண் போலீசாரிடம் வழங்கி இருப்பதாக தெரிகிறது. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்ணுக்கு இன்று மருத்துவ பரிசோதனை

ஆபாச வீடியோ விவகாரத்தில் நீதிபதியிடம் வாக்குமூலம் அளிக்க ஆஜரான இளம்பெண் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளார். அவருக்கு நேற்றே மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று அவரிடம் முதற்கட்ட விசாரணையை நடத்தினார்கள். இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) இளம்பெண்ணுக்கு பெங்களூரு பவுரிங் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இளம்பெண்ணை ரமேஷ் ஜார்கிகோளி கற்பழித்திருப்பதாக கூறி இருப்பதால், அது சம்பந்தப்பட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதுபற்றி பவுரிங் ஆஸ்பத்திரிக்கு போலீசார் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story