கொரோனா பாதிப்பு உயர்வு; ஜார்க்கண்டில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு


கொரோனா பாதிப்பு உயர்வு; ஜார்க்கண்டில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 April 2021 5:54 PM GMT (Updated: 6 April 2021 5:54 PM GMT)

கொரோனா பாதிப்பு உயர்வால் ஜார்க்கண்டில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளன.

ராஞ்சி,

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்து பல மாநிலங்களில் உச்சமடைந்து வருகிறது.  இதனால், மராட்டியம், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.  இதேபோன்று புதிய வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ஜார்க்கண்டில் கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளன.  இந்த அறிவிப்பு வருகிற 8ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

இந்த மாதம் இறுதிவரை அமலில் இருக்கும்.  இந்த புதிய உத்தரவின்படி, திருமண விழாக்களில் அதிகபட்சம் 200 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.  இறுதி சடங்குகள் தொடர்புடைய நிகழ்ச்சிகளில் 50 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

மத ஊர்வலங்கள் உள்பட அனைத்து ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்படுகின்றன.  மாணவ மாணவியர் வகுப்புகளுக்கு வருவது கட்டாயமில்லை.  பெற்றோரின் ஒப்புதலுடன் அவர்கள் வகுப்புகளுக்கு வரலாம்.

அனைத்து உணவு விடுதிகளும் 50% இருக்கைகளை நிரப்பி கொள்ளும் வகையில் செயல்படலாம்.  உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.  அனைத்து பூங்காக்களும் மூடப்படும்.

இதேபோன்று இரவு 8 மணிக்கு பின்னர் அனைத்து கடைகள், உணவு விடுதிகள் மற்றும் கிளப்புகள் திறந்திருக்க அனுமதி கிடையாது.  எனினும், உணவு பொருட்களை வீட்டுக்கு எடுத்து செல்வதும் மற்றும் வீட்டுக்கு சென்று வினியோகம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story