தேர்தல் சுதந்திரமாக நடைபெறவேண்டும்; பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவேண்டும் - மம்தா பானர்ஜி


தேர்தல் சுதந்திரமாக நடைபெறவேண்டும்; பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவேண்டும் - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 7 April 2021 9:51 AM GMT (Updated: 7 April 2021 9:51 AM GMT)

தேர்தல் சுதந்திரமாக நடைபெற வேண்டும்; பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய 5 கட்டங்களுக்கு முறையே ஏப்ரல் 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2 ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
 
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், மேற்குவங்காளத்தின் கோட்ச் பிஹர் பகுதியில் அம்மாநில முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரமான மம்தா பானர்ஜி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 

பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா, தேர்தல் பணியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சிலர் வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்வதை தடுப்பதாக குற்றஞ்சுமத்தியுள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, எங்களுக்கு தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவேண்டும், பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு மையங்களுக்கு செல்லும் பொதுமக்களை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) இடையூறு செய்யக்கூடாது. உண்மையான சிஆர்பிஎஃப் வீரர்களை நான் மதிக்கிறேன். ஆனால், தொல்லைகொடுக்கும், பெண்களை தாக்கும், மக்களை துன்புறுத்தும் பாஜக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை நான் மதிப்பதில்லை’ என்றார்.

Next Story