காதல் திருமணம் செய்த வாலிபர் வீட்டுக்கு தீ வைப்பு; இளம்பெண்ணின் குடும்பத்தினர் வெறிச்செயல்


தீ வைக்கப்பட்ட வீடு
x
தீ வைக்கப்பட்ட வீடு
தினத்தந்தி 8 April 2021 9:25 PM GMT (Updated: 8 April 2021 9:25 PM GMT)

பெங்களூரு அருகே காதல் திருமணம் செய்த வாலிபரின் வீட்டுக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் தீ வைத்த சம்பவம் நடந்து உள்ளது.

பெங்களூரு:

காதல் திருமணம்

  பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சர்ஜாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோனிகட்டபுரா கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் (வயது 27). இந்த நிலையில் ராகுலுக்கும், கோனிகட்டபுராவை சேர்ந்த ரேகா (24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது.

  ராகுல் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பாத நிலையில், ரேகாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராகுலுடனான காதலை கைவிடும்படி ரேகாவை வற்புறுத்திய பெற்றோர், குடும்பத்தினர் ரேகாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவும் நடவடிக்கை எடுத்தனர். இதனால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரேகா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் ராகுலும், ரேகாவும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இதுபற்றி அறிந்த ரேகாவின் குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்தனர்.

வீட்டிற்கு தீ வைப்பு

  இந்த நிலையில் ராகுலின் வீட்டிற்கு சென்ற ரேகாவின் குடும்பத்தினர் அவரது வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் வீட்டில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அந்த தீ மளமளவென வேகமாக வீட்டில் உள்ள அனைத்து அறைகள் மற்றும் சமையல் அறைகளிலும் பற்றி எரிந்தது. பின்னர் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ராகுலின் மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்துவிட்டு ரேகாவின் குடும்பத்தினர் தப்பி சென்று விட்டனர்.

  இதுபற்றி அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் சர்ஜாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட போது அந்த வீட்டில் ராகுல் குடும்பத்தினர் யாரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story