கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு எதிரொலி மராட்டியத்தில் தடுப்பூசி மையங்கள் மூடப்படுகின்றன - மத்திய அரசு மீது மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு


கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு எதிரொலி மராட்டியத்தில் தடுப்பூசி மையங்கள் மூடப்படுகின்றன - மத்திய அரசு மீது மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 April 2021 11:57 PM GMT (Updated: 8 April 2021 11:57 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், பல மையங்கள் மூடப்படுகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு மீது மராட்டிய மந்திரி பரபரப்பு குற்றசாட்டை தெரிவித்து உள்ளார்.

மும்பை, 

நாட்டில் கொரோனா 2-வது அலை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில் மராட்டியத்தில் அசுர வேகத்தில் தொற்று பரவி வருகிறது.

இதனால் மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தலைநகர் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் பல மையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே பேஸ்புக் நேரலையில் பேசியதாவது:-

மராட்டியத்திற்கு குறைந்த அளவில் தான் தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி வருகிறது. 12 கோடி மக்கள் தொகை கொண்ட மராட்டியத்தில் இதுவரை 1 கோடியே 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இங்கு 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத்தில், தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை வெறும் 17 ஆயிரம் ஆக உள்ளது. வியாழக்கிழமை (நேற்று) மராட்டியத்துக்கு 7.5 லட்சம் டோஸ் மருந்தை மட்டும் மத்திய அரசு வழங்கி உள்ளது. அதிக கொரோனா பாதிப்பு மற்றும் அதிகளவில் தடுப்பூசி போட்டு வரும் மராட்டியத்திற்கு 7.5 லட்சம் டோஸ்கள் மட்டும் வழங்கப்பட்டு இருப்பது ஏன்?.

ஆனால் உத்தரபிரதேசத்திற்கு 48 லட்சம் டோஸ்கள், மத்திய பிரதேசத்திற்கு 40 லட்சம் டோஸ்கள், குஜராத்திற்கு 30 லட்சம் டோஸ்கள், அரியானாவிற்கு 24 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.

மத்திய சுகாதார மந்திரியிடம் பேசியதை அடுத்து வருகிற 15-ந் தேதிக்கு பிறகு 17.5 லட்சம் டோஸ் மருந்து தருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எங்களால் தினமும் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும். தற்போது எஞ்சியுள்ள 9 லட்சம் டோஸ்கள் மருந்தின் அடிப்படையில், இன்னும் 1½ நாட்கள் மட்டுமே போட முடியும்.

பல இடங்களில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வருகின்றன. மக்களை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தடுப்பூசி விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இடையே மோதல் இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story