கைதான போலீஸ் அதிகாரியின் சர்ச்சை கடிதம் மூலம் மராட்டிய கூட்டணி அரசை பலவீனப்படுத்த பா.ஜனதா அழுக்கு அரசியல் செய்கிறது; சிவசேனா காட்டம்


கைதான போலீஸ் அதிகாரியின் சர்ச்சை கடிதம் மூலம் மராட்டிய கூட்டணி அரசை பலவீனப்படுத்த பா.ஜனதா அழுக்கு அரசியல் செய்கிறது; சிவசேனா காட்டம்
x
தினத்தந்தி 9 April 2021 4:16 AM GMT (Updated: 9 April 2021 4:16 AM GMT)

கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே கடிதம் மூலம் மந்திரி மீது குற்றச்சாட்டி இருப்பது, மராட்டிய அரசை பலவீனப்படுத்த பா.ஜனதா அழுக்கு அரசியலை செய்கிறது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.

மீண்டும் அதிர்வலை

ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரக்கோரி மும்பை போலீசாரை கட்டாயப்படுத்திய புகாரில் மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் சிக்கிய வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசேயை நேற்று முன்தினம் கோர்ட்டில் என்.ஐ.ஏ. ஆஜர்படுத்திய போது, அவர் நீதிபதியிடம் கொடுத்த கடிதம் மராட்டிய அரசியலில் மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அந்த கடிதத்தில், பதவி இழந்த மந்திரி அனில் தேஷ்முக் மீதும், சிவசேனாவை சேர்ந்த போக்குவரத்து மந்திரி அனில் பரப் மீதும் முறைகேடு புகார்களை கூறியிருந்தார்.

இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

அழுக்கு அரசியல்

சிறை கைதியிடம் இருந்து கடிதம் எழுதி வாங்கும் புதிய போக்கு தற்போது நிலவி வருகிறது. இதற்கு முன்பு நாடு எப்போதும் இதுபோன்றதொரு அழுக்கு அரசியல் நடத்தப்படுவதை பார்த்ததில்லை.அரசியல் கட்சியின் தொழில் நுட்ப பிரிவு மற்றும் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்படுகிறது. இதற்கு சிறை கைதிகளின் கடிதங்களும் பயன்படுத்தப்படுகிறது.மகா விகாஷ் அகாடி கட்சியின் உறுதித்தன்மையை பலவீனப்படுத்தவும், சீர்குலைக்கவும் எடுக்கப்படும் இத்தகைய முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறாது.

எனக்கு அனில் பரப்பை நன்றாக தெரியும். அவர் ஒரு தீவிரமான சிவசேனா தொண்டர். பால் தாக்கரே பெயரில் ஒருபோதும் அவர் தவறாக சத்தியம் செய்ய மாட்டார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story