மதரஸா மாணவர்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயில அனுமதி: உத்தரபிரதேச முதல்வர் உத்தரவு

மதரஸா மாணவர்கள் கல்லூரி,பல்கலைக்கழகங்களில் பயில அனுமதி வழங்கி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார் இதானால் 3 லட்சம் பேர் பலனடைவார்கள்.
மதரஸா மாணவர்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயில அனுமதி: உத்தரபிரதேச முதல்வர் உத்தரவு
Published on

லக்னோ

மத்திய அரசின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருப்பது பள்ளி கல்வி வாரியக் கவுன்சில்(சிஓபிஎஸ்இ). இதன் கீழ் அனைத்து மாநில பள்ளி கல்வி நிறுனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், பதிவு செய்யப்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் நாட்டின் அனைத்து பொதுக்கல்வி நிறுவனங்களிலும் உயர் கல்வி பயில முடியும். ஆனால், உத்தர பிரதேசத்தின் மதரஸாக்கள் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

இதனால், மதரஸா மாணவர்கள் அம்மாநிலத்தின் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயில முடியாமல் இருந்தது. இந்நிலையை மாற்றி உத்தர பிரதேசத்தில் உள்ள சுமார் 17,500 மதரஸாக்களின் மூன்று லட்சம் முஸ்லிம் மாணவர்கள் பலன் பெற முதல்வர் யோகி ஆதித்யநாத் வாய்ப்பளித்துள்ளார். முதல் முறை உத்தரபிரதேசத்தின் மதரஸாக்களை சிஓபிஎஸ்இ நிறுவனத்தில் பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்தர பிரதேச மதரஸா வாரியத்தின் உறுப்பினர் ஜர்காமுதீன் கூறும்போது, முதல் முறையாக இங்குள்ள மதரஸாக்களை சிஓபிஎஸ்இ நிறுவனத்தில் பதிவு செய்ய முதல்வர் ஆதித்யநாத் அனுமதி அளித்துள்ளார். இதன் பலனாக அதன் மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பயில முடியும். இப்பதிவு இல்லாமல் சில சமயம் மதரஸா மாணவர்கள் அரசு பணிகளில் இணைவதிலும் சிக்கல் இருந்தது எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் மதரஸாக்கள் உருவானதாக கூறப்படுகிறது. தற்போது உத்தரபிரதேசத்தில் தனியார் மதரஸாக்கள் சுமார் 17,000 மற்றும் மாநில அரசிற்கானது 558 உள்ளன. இஸ்லாமிய கல்விக்காகத் துவக்கப்பட்டவற்றின் பிற்காலங்களில் மத நல்லிணக்கப் பாடங்களும் போதிக்கப்பட்டன. மத வேறுபாடில்லாமல் முஸ்லிம் அல்லாதவர்களும் பயின்றனர்.

பிறகு இஸ்லாமியர்களுக்கு மட்டுமாக மாறிய மதரஸா மாணவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் பொதுக்கல்வி பயில்வதில் சிக்கல் இருந்தது. இது டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் உத்தரபிரதேச அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் உள்ளிட்ட சில மத்திய கல்வி நிறுவனங்களில் மட்டும் இருக்கவில்லை. இவற்றில் மதரஸாவில் பெற்ற பட்டங்களை குறிப்பிட்ட வகுப்புகளுக்கு இணையாக ஏற்று பொதுக் கல்வியில் தொடர அனுமதிக்கப்படுகிறது.

இதுபோன்ற முறையில் தற்போது உத்த்பிரதேசத்தின் அனைத்து மதரஸா மாணவர்களும் பயன் பெறும் வகையில் முதல்வர் ஆதித்யநாத் அரசு வழி செய்துள்ளது. இதற்கு முன் அரசு மதரஸா மாணவர்களை பொதுக் கல்வி முறையில் கொண்டு வரும் வகையில் அவர்களுக்கு மத்திய அரசின் என்சிஆர்டி பாட நூல்களையும் அறிமுகப்படுத்தி இருந்தது. இவை மறைக் கல்வி தவிர அறிவியல், ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற பாடங்களில் உத்தரபிரதேச மதரஸாக்களில் பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com