இந்தியாவில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியது


இந்தியாவில்  இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 9 April 2021 5:25 PM GMT (Updated: 9 April 2021 5:25 PM GMT)

இந்தியாவில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியது

புதுடெல்லி,

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஆரம்பத்தில் தடுப்பு மருந்தோ, தடுப்பூசிகளோ இல்லை. இதனால் கடிவாளம் இல்லா குதிரையாக உலகின் நாலாபக்கமும் தனது கொடூர கரத்தை விரித்த அந்த வைரஸ், அதில் சிக்கிய அனைவரையும் வாரிச்சுருட்டியது.

அப்படி கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை பல கோடிகளில் அமைந்து விட்டது. அதைப்போலவே தன்னிடம் அகப்பட்டவர்களில் பலரின் உயிரை கபளீகரமும் செய்து விட்டது. உலகம் முழுவதும் கொரோனாவால் மாண்ட உயிர்களின் எண்ணிக்கையோ பல லட்சங்களை தாண்டியது.தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடக்கிறது. 

 இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்த 2 தடுப்பூசிகளும் பலகட்ட சோதைகளை முடித்திருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டன. பின்னர் இந்த தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் மிகப்பெரிய திட்டமும் தொடங்கப்பட்டது. கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. 

கொரோனாவின் 2-வது அலை தற்போது தீவிரம் பெற்றுள்ளதால் கொரோனா தடுப்பூசி பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று மட்டும் 32 லட்சத்து 16 ஆயிரத்து 949- பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை மொத்தம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 9 கோடியே 78 லட்சத்து 71 ஆயிரத்து 045- ஆக உள்ளது. 

Next Story