துப்பாக்கி சூடு நடந்த பூத்தில் எங்களுடைய வீரர்கள் பணியில் இல்லை: சி.ஆர்.பி.எப். விளக்கம்


துப்பாக்கி சூடு நடந்த பூத்தில் எங்களுடைய வீரர்கள் பணியில் இல்லை:  சி.ஆர்.பி.எப். விளக்கம்
x
தினத்தந்தி 10 April 2021 9:04 AM GMT (Updated: 10 April 2021 9:04 AM GMT)

மேற்கு வங்காளத்தில் துப்பாக்கி சூடு நடந்த பூத்தில் எங்களுடைய வீரர்கள் பணியில் இல்லை, அந்த சம்பவத்துடன் எங்களுக்கு தொடர்பும் இல்லை என்று சி.ஆர்.பி.எப். விளக்கம் அளித்துள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபைக்கான 4வது கட்ட தேர்தல் இன்று காலை 7 மணி தொடங்கி நடந்து வருகிறது.  பரபரப்பு நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக கூச் பெஹார் உள்ளது.  மொத்தமுள்ள, 15 ஆயிரத்து 940 ஓட்டுச்சாவடிகளுக்கு, 789 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், காலையில் வாக்கு பதிவு தொடங்கியதில் இருந்து அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.  பா.ஜ.க. வேட்பாளர் லாக்கட் சாட்டர்ஜி சென்ற கார் மீது உள்ளூர்வாசிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த சூழலில், செய்தி சேகரிக்க சென்ற ஊடகக்காரர்களின் கார்கள் மீதும் வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது.  அவர்களது கார்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேற்கு வங்காளத்தின் கூச் பெஹாரில் திடீரென துப்பாக்கி சூடு நடந்துள்ளது.  இந்த சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  4 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இதுபற்றி மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று கூறும்பொழுது, கூச் பெஹாரில் உள்ள சீத்தல்குச்சி பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.  மற்றொரு மரணமும் இன்று காலை நடந்து உள்ளது.

சி.ஆர்.பி.எப். எனது எதிரி அல்ல.  ஆனால், உள்துறை மந்திரியின் அறிவுறுத்தலால் சில சதி திட்டங்கள் நடந்தேறி வருகின்றன.  அதற்கு இன்று நடந்த சம்பவம் சாட்சி என கூறியுள்ளார்.

வரிசையில் நின்ற வாக்காளர்களை சி.ஆர்.பி.எப். சுட்டு கொன்றுள்ளது.  அவர்களுக்கு இதுபோன்ற தைரியம் எங்கிருந்து வந்தது?  பா.ஜ.க.வுக்கு தோல்வி அடைந்து இருக்கிறோம் என தெரிந்து இருக்கிறது.  அதனால் அவர்கள் வாக்காளர்கள் மற்றும் தொண்டர்களை கொன்று வருகின்றனர் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் சி.ஆர்.பி.எப். விளக்கம் அளித்துள்ளது.  அதில், கூச் பெஹாரில் சீத்தல்குச்சி சட்டசபை தொகுதியில் ஜோர்பத்கி பகுதியில் 126வது பூத்துக்கு வெளியே பொதுமக்களில் 4 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர் என ஊடகங்களில் தகவல் வெளிவந்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் துப்பாக்கி சூடு நடந்த பூத்தில் எங்களுடைய வீரர்கள் யாரும் பணியில் ஈடுபடுத்தப்படவும் இல்லை.  அந்த சம்பவத்துடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.  இதனால் 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Next Story