கொரோனா சூழலை மோடி அரசு தவறாக கையாண்டுள்ளது: காங். தலைவர் சோனியா காந்தி


கொரோனா சூழலை மோடி அரசு தவறாக கையாண்டுள்ளது: காங். தலைவர் சோனியா காந்தி
x
தினத்தந்தி 10 April 2021 12:37 PM GMT (Updated: 10 April 2021 12:37 PM GMT)

மோடி அரசு கொரோனா சூழலை மோசமாக கையாண்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இருப்பதாக பல்வேறு மாநிலங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.  இந்த சூழலில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல், தொற்றைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள், காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. 

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:

முதலில் நாம் நம் நாட்டு மக்களுக்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், வேகப்படுத்த வேண்டும். அதன்பின்புதான் ஏற்றுமதி குறித்தும், மற்ற நாடுகளுக்குத் தடுப்பூசியைப் பரிசளிப்பது குறித்தும் பேச வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தினார்.

மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவலையும் சரியாகக் கையாளாமல் கட்டுப்படுத்தவில்லை, தற்போது தடுப்பூசியையும் பற்றாக்குறை இல்லாமல் கொண்டு செல்ல முடியவில்லை என சோனியா காந்தி குற்றம் சாட்டினார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் கூடும் அனைத்துவிதமான திருவிழாக்கள், தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்” என்றார். 

இந்தக் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிஸ் எம்.பி. ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் பங்கேற்றனர்.


Next Story