கிருஷ்ணா நதியில் மூழ்கி மும்பை போலீஸ்காரர் பலி - ஒரு மாதத்திற்கு முன் திருமணமானவர்


கிருஷ்ணா நதியில் மூழ்கி மும்பை போலீஸ்காரர் பலி - ஒரு மாதத்திற்கு முன் திருமணமானவர்
x
தினத்தந்தி 12 April 2021 1:30 AM GMT (Updated: 12 April 2021 1:30 AM GMT)

கிருஷ்ணா நதியில் மூழ்கி மும்பை போலீஸ்காரர் பலியானார். 1 மாதத்துக்கு முன்பு தான் இவருக்கு திருமணமானது.

புனே,

சாங்கிலி மாவட்டம் மீரஜ் மாதவ்நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில் பாட்டீல் (வயது32). மும்பையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 1 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் ஆகி இருந்தது.

இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி சுனில் பாட்டீல் மற்றும் அவரது நண்பர்கள் திக்ராஜ் பந்தாரா என்ற இடத்திற்கு சென்றனர். அங்கு சமையல் செய்து விருந்து சாப்பிட்ட பின்னர் சுனில் பாட்டீல் உள்ளிட்ட அனைவரும் அங்குள்ள கிருஷ்ணா நதியில் குளிக்க சென்றனர்.

இதில், நதியில் ஆழமான இடத்திற்கு உற்சாக மிகுதியால் சென்ற சுனில் பாட்டீலால் நீந்தி கரையேற முடியாமல் தத்தளித்தார். சிறிது நேரத்தில் தன்ணீரில் மூழ்கினார்.

இதனை கண்ட அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். இதில் முடியாமல் போனதால், சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து நதியில் இறங்கி அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் இரவு வரை அவரை கண்டுபடிக்க முடியவில்லை. இதன்பின்னர் வெளிச்சம் இன்மையால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

இதன்பின்னர் நேற்று முன்தினம் காலை மீண்டும் நதியில் தேடியபோது சுனில் பாட்டீலை பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து சாங்கிலி கிராம போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story