சுப்ரீம் கோர்ட்டின் 50% பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு; நீதிபதிகள் வீட்டில் இருந்து பணியாற்ற முடிவு


சுப்ரீம் கோர்ட்டின் 50% பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு; நீதிபதிகள் வீட்டில் இருந்து பணியாற்ற முடிவு
x
தினத்தந்தி 12 April 2021 5:56 AM GMT (Updated: 12 April 2021 5:56 AM GMT)

சுப்ரீம் கோர்ட்டின் 50% பணியாளர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு நீதிபதிகள் வீட்டில் இருந்து பணிபுரிய இருக்கின்றனர்.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் தினமும் புதிய உச்சம் அடைந்து வருகிறது.  கொரோனாவின் புதிய அலையால் கடந்த ஒரு வாரத்தில் நாட்டில் 10 லட்சம் பேருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  நாளொன்றுக்கு 1 லட்சம் பேருக்கு கூடுதலான பாதிப்புகளை தொடர்ந்து 6வது நாளாக நாடு சந்தித்து வருகிறது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  904 பேர் உயிரிழந்து உள்ளனர்.  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,35,27,717 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்து உள்ளது.  கொரோனா பாதிப்புகளுக்கு 12.01 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு சுப்ரீம் கோர்ட்டின் 50% பணியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 44 பணியாளர்களுக்கு பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் வீட்டில் இருந்தபடியே காணொலி காட்சி வழியே வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.  நீதிமன்ற அறைகள் உள்பட நீதிமன்ற வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

Next Story